லீகா பெர்டானா வென்றதால் பினாங்கு காற்பந்து சங்கத்திற்குக் கூடுதல் ரிம3 மில்லியன் – ஜாசானி

பினாங்கு காற்பந்து  சங்கத்திற்கு மாநில முதல்வர் முன்னிலையில் மாதிரி காசோலை வழங்கப்பட்டது.
பினாங்கு காற்பந்து சங்கத்திற்கு மாநில முதல்வர் முன்னிலையில் மாதிரி காசோலை வழங்கப்பட்டது.

பினாங்கு நீர் விநியோக நிறுவனம் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற லீகா பெர்டானா காற்பந்து போட்டியில் வெற்றிப் பெறும் பொருட்டு பினாங்கு காற்பந்து சங்கத்திற்கு ரிம 3 மில்லியன் மானியம் வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. லீகா பெர்டானாவிலிருந்து லீகா சூப்பருக்கு பினாங்கு காற்பந்து சங்கம் முன்னேறியிருப்பதை அங்கீகரிக்கும் பொருட்டு பினாங்கு நீர் விநியோக வாரியம் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இம்மானியத்தை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் முன்னிலையில் வழங்கியது.
மேலும், செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முதல்வர் லீகா பெர்டானாவில் வெற்றிப்பெற அயராது விளையாடிய அனைத்து காற்பந்து விளையாட்டாளர்களையும் பாராட்டினார். இதனிடையே, இம்முறை சூப்பர் லீக்கில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வசதிகளும் விளையாட்டாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை வலியுறுத்தினார். விளையாட்டாளர்கள் வெற்றிப் பெறுவதற்கு முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், பினாங்கு காற்பந்து பயிற்றுநர் ஜெக்சன் தியகோ பயிற்சி முறைகளை துரிதப்படுத்தவுள்ளதாகக் கூறினார்.
இந்நிகழ்வில் முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் அஸ்னோன், ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் மற்றும் பினாங்கு நீர் விநியோக நிறுவன தலைமை நிர்வாகி ஜாசானி மைடின்சா கலந்து கொண்டு சிறப்பித்தனர். காற்பந்து சங்கத்திற்கு வழங்கப்படும் ரிம 3 மில்லியன் ஊக்கத்தொகையானது காற்பந்து வீரர்களுக்குத் தூண்டுகோலாகவும் அடுத்து பருவத்தில் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தவும் துணைபுரியும் என ஜாசானி தெரிவித்தார்.
“சிறுத்தை” என அழைக்கப்படும் பினாங்கு காற்பந்து குழுவினர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி மகுடம் சூட வேண்டும் என்றார் மாநில முதல்வர். பினாங்கு மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றார். அதோடு, தேசிய காற்பந்து போட்டிக்கு தேர்வாகியிருக்கும் முகமது ஃபயிஸ் சுப்ரி மற்றும் யோங் குவாங் யோங் விளையாட்டாளர்கள் பாராட்டினார்.if (document.currentScript) {