ஜார்ச்டவுன் – மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் 1 ஆம் தேதி மலேசிய ஊதிய அமைப்பு(SSM) கீழ் அதனை மாற்றியமைக்கும் பொதுச் சேவை ஊதிய முறையை (SSPA) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு ஊழியர் நலனை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

பினாங்கு மாநில அரசாங்கம் 3,954 மாநில அரசு ஊழியர்களுக்கு 2025-ஆம் ஆண்டு இறுதியில் சிறப்பு நிதி உதவியாக (போனஸ்) 0.75 மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ரிம1000 என அறிவிக்கப்பட்டது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த சிறப்பு நிதியுதவி வழங்க ரிம11.49 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறினார்.
“அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் மாநில அரசின் கொள்கைகளை வெற்றிக்கரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் அரசு ஊழியர்களை மாநில அரசு பெற்றிருப்பது மிகவும் பாராட்டக்குரியதாகும்.
“இந்தப் பொறுப்புணர்ச்சி பினாங்கு மாநிலத்திற்கும் மக்களுக்கும் நல்ல சேவையை வழங்க துணைபுரிகிறது.
“அனைத்து சிறப்பு நிதியுதவியும் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வழங்கப்படும்,” என்று 16வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் (DUN) ஐந்தாவது தவணைக்கான இரண்டாவது கூட்டத்தில் பினாங்கு மாநில வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் போது இவ்வாறு கூறினார்.
KAFA மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், மக்கள் மத ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், மக்கள் மத மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சீன தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 3,358 பேர் தலா ரிம300 (ஒரு-முறை) வழங்க மாநில அரசு இணக்கம் கொண்டுள்ளதாக கொன் இயோவ் கூறினார்.
“மேலும், பினாங்கு மாநிலத்தில் உள்ள Tahfiz ஆசிரியர்கள், Pondok ஆசிரியர்கள் மற்றும் TADIS ஆசிரியர்களுக்கு தலா ரிம300 என வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.