சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரச்சாரம்

பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் பினாங்கு வாழ் மக்களின் நலனில் அதிக அக்கறைக்காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இதனைத் தொடரும் முயற்சியில் கடந்த 7 & 8 டிசம்பர் 2013-ஆம் திகதி பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் ஏற்பாட்டில் சமூகம் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரச்சாரம் (Kempen Kemajuan Keselamatan Komuniti & Kesihatan) தாமான் இண்ராவாசேவில் இனிதே நடைபெற்றது. அவ்வட்டார மக்களிடையே சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பற்றிய விழிப்புணர்வுவை மேலோங்கச் செய்யவே இப்பிரச்சாரம் நடத்தப்பட்டது.

படம் 1: சமூகம் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மேம்பாட்டுப் பிரச்சாரத்தில் வரவேற்பு உரையாற்றுகிறார் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள்
படம் 1: சமூகம் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மேம்பாட்டுப் பிரச்சாரத்தில் வரவேற்பு உரையாற்றுகிறார் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள்

பிறை வட்டாரத்தில் தலை தூக்கியிருக்கும் ஏய்டிஸ் காய்ச்சல் பிரச்சனைக்குத் தீர்வுக் காணும் பொருட்டு செபெராங் பிறை நகராண்மைக் கழக ஊழியர்கள், தாமான் இண்ராவாசே பொதுமக்களுடன் இணைந்து துப்புரவு பணி மேற்கொண்டனர். அதோடு, பொதுமக்களுக்கு ஏய்டிஸ் காய்ச்சலின் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வுவை ஏற்படுத்த மத்திய செபெராங் பிறை மாவட்ட சுகாதார அதிகாரி டக்டர் ரஃபிடா அவர்களின் சொற்பொழிவும் நடைபெற்றது. தொடர்ந்து, காவல் துறை அதிகாரி முகமது அஸ்ரியின் பாதுகாப்பு பற்றிய உரையும் இடம்பெற்றது. இதன் வழி, அவ்வட்டாரத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அவரின் உரை அமைந்திருந்தது.

இதனிடையே, நிகழ்வில் வரவேற்பு உரை வழங்கிய பிறை சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் பொதுமக்களுக்குச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பொதுமக்களைத் தங்களின் தத்தம் வீடுகளைத் தூய்மையாகவும் ஏய்டிஸ் கொசுக்கள் பரவாமல் இருப்பதையும் உறுதிச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்வை வெற்றியடையச் செய்த அனைத்து தரப்பினருக்கும் தமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் அவ்வட்டார மக்களுக்கு அதிஷ்ட குலுக்கலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கஸ்தூரி பட்டும் கலந்து சிறப்பித்தார்.