“பாலர் பள்ளி தமிழ்ப்பள்ளி ஏற்றத்திற்கு வித்திடும்”- துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்” குறள்: 393

வாழ்க்கைக்கு வழிகாட்டும் கண்களைப்போல் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கல்வியைக் கற்றறியாதவர் கண்கள் இருந்தும் பார்வையற்றவராவர் எனத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். எனவே கல்விச் செல்வத்தை அனைவரும் பெற்றிருப்பது அத்தியாவசியமாகும். அந்த வகையில் அதி முக்கியம் வாய்ந்த இந்தக் கல்வியை நம் இந்திய மாணவர்கள் சிறந்த முறையில் கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து பல சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது.

படம்  1: பினாங்கு மாநில உயரமட்டத் தலைவர்களுடன் மானியம் பெற்றுக்கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள்.
படம் 1: பினாங்கு மாநில உயரமட்டத் தலைவர்களுடன் மானியம் பெற்றுக்கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்.

கடந்த 15 ஏப்ரல் 2015-ஆம் நாள், மாநில அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பினாங்கின் அனைத்துத் தமிழ்ப்பள்ளி பாலர் பள்ளிகளுக்கும் ரிம1 மில்லியன் மானியத்தை பகிர்ந்தளித்ததை நாம் அறிவோம். மேலும் மாநில அரசு தமிழ்க்கல்வி சிறப்பு நிதிக்கு ரிம 1 மில்லியன் வழங்கியது. இதுவரையில் மலேசியாவில் எந்த மாநில அரசாங்கமும் பாலர் பள்ளிகளுக்கு மானியம் வழங்கியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநில அரசு பாலர் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் ரிம100,000 மானியம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி 25 பாலர் பள்ளிகளுக்கும் அம்மானியத்தைப் பகிர்ந்தளித்தது. இம்முறை கொடுக்கப்படும் மானியத்தைக் கொண்டு பாலர் பள்ளிகளுக்குத் தேவையானப் பொருட்களை வாங்க தமிழ்ப்பள்ளிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 15-ஆம் திகதி கொம்தார் ஏ அரங்கத்தில் நடைபெற்ற இம்மானியம் வழங்கும் நிகழ்ச்சியை பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங் தலைமை தாங்கினார். இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் மற்ற பள்ளிகளுக்கு நிகராகச் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்குப் பல நிதியுதவிகளை வழங்கி எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்து வருகிறது என முதல்வர் தம் சிறப்புரையில் கூறினார். இதனிடையே, பாலர் பள்ளி இன்றி இயங்கி வந்த திராண்ஸ்கிரியான் தோட்ட தமிழ்ப்பள்ளியில் மாநில அரசின் முயற்சியில் தற்போது புதிய பாலர் பள்ளி துவங்கப்பட்டிருப்பதைப் பாராட்டினார். இன்னும் அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளி இல்லாத்ததையும் விரைவில் அதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்கவிருப்பதாகக் கூறினார். இதனிடையே, பாலர் பள்ளியின் ஆதிக்கத்தில்தான் நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க முடியும் என்றார் மாநில முதல்வர்.

இதுவரை இல்லாத வகையில் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமளவில் உதவி வரும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசின் செயல் பாராட்டக்குறியது. அதோடு, பாலர் பள்ளி ஆசிரியர் எதிர்நோக்கும் ஊதியம் பிரச்சனைக்கு தலைமையாசிரியர்கள் மற்றும் தத்தம் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் தீர்வுக்கண்டு அவர்களுக்கு நல்லதொரு ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பினாங்கின் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் நல்லதொரு கற்றல் கற்பித்தல் சூழல் உண்டாக வேண்டும் என்ற உன்னத நோக்கில் வழங்கப்படும் இந்த மானியம் மிகவும் பாராட்டுக்குரியதாகும். இந்தியர்களின் தேவைகளும் உரிமைகளும் உயர்ந்த நிலையில் காக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுறுத்தினார். அதற்காக ஆசிரியர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமையினை சரியாகச் செய்வார்கள் என்றும் பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.

இம்மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் பினாங்கு முதல்வர், இரண்டாம் துணை முதல்வர் உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரி பட்டு, ஆட்சிக்குழு உறுப்பினர்களான சோங் எங் மற்றும் டேனி லோ உடன் தமிழ்ப்பள்ளிகளுக்கானச் சிறப்பு அதிகாரிகளான டத்தோ டாக்டர் அன்பழகன் மற்றும் திருமதி மங்களேஸ்வரி,

திரு காளிதாஸ், திரு அருணாச்சலம், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், பாலர் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.