பட்டர்வொர்த் – மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் கல்விப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற எம்.பி.எம் தேர்வுக்கான A+ வழிகாட்டி பயிலரங்கத்தை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

“இந்தப் பயிலரங்கம், மாணவர்கள் தேர்வுக்கானப் பதிலளிக்கும் நுட்பங்களை விரிவாகக் கற்றுக் கொள்வதோடு, A+ பெறும் திறனையும் மேம்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. மாணவர்களின் சிந்தனையும், எழுத்துத் திறனையும் வளப்படுத்தும் வகையில், பயிற்சியாளர்கள் வழிகாட்டல் வழங்கினர்.
“இந்த முயற்சி மாணவர்களுக்கு தேர்வுக்கான சிறந்த தயாரிப்பையும், மன உறுதியையும் வழங்குகிறது.
மாணவர்கள் எஸ்.பி.எம் கல்விப் பயணத்தில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் திறனையும் வளர்க்கும் ஒரு முன்னோடியாகவும் திகழ்கிறது,” என்று சட்டமன்ற உறுப்பினர் குமரன் தெரிவித்தார்.

பட்டர்வொர்த் டிஜிட்டல் நூலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தில் 60 இந்திய மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், வரலாறு மற்றும் நன்னெறிக் கல்வி ஆகிய எஸ்.பி.எம் அடிப்படை பாடங்களுக்கான விடையளிக்கும் நுட்பங்கள் மற்றும் A+ மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிகாட்டி பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
“இந்தப் பயிலரங்கம், மாணவர்களுக்கு எஸ்.பி.எம் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கான பயனுள்ள பதிலளிக்கும் நுட்பங்களையும் உத்திகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது,” என்று மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் நந்தகுமார் கூறினார்.
இந்த முன்முயற்சி திட்டம், பினாங்கு அருள்நிலைய கல்விப் பணியகத்தின் கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்கும் சமூகத்தில் இளைஞர்களின் கல்வி வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது, என்றார்.
இந்நிகழ்ச்சியில், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் லிங்கேஸ்வரன், டாக்டர் எஸ்.மாலதி நாயர் (உதவி செயலாளர்) மற்றும் திருமதி கோமதி சுப்பிரமணியம், (உதவி பொருளாளர்) மற்றும் பினாங்கு அருள்நிலைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மலேசிய இந்து தர்ம மாமன்றம், பினாங்கு அருள்நிலையம் சமய பணிகளுடன் இணைந்து கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்களையும் மேற்கொண்டு, இந்தியச் சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக செயல்படுவது பாராட்டத்தக்கதாகும்.