சிலிக்கான் தீவில் 150 ஏக்கர் நிலம் மீட்பு நிறைவு – ஜைரில்

Admin
7825e44d 0464 4282 9bbb 2205118ddc4d

ஜார்ச்டவுன் – இந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலிக்கான் தீவுத் திட்டத்தில் ஏறக்குறைய 150 ஏக்கர் அல்லது மொத்த திட்டமிடப்பட்டப் பரப்பளவில் 6.5% மீட்கப்பட்டுள்ளதாக மாநில உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கீர் ஜோஹாரி தெரிவித்தார்.

இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 2023 இல் தொடங்கப்பட்டதிலிருந்து பெறப்பட்ட தகவல் ஆகும்.

“பினாங்கின் பொருளாதார மற்றும் டிஜிட்டல் உருமாற்றத்தை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருக்கும் ஒரு நீண்டகால வியூக முயற்சிக்கு இது ஒரு நிலையான மற்றும் ஊக்கமளிக்கும் தொடக்கத்தைக் குறிக்கிறது.
“சிலிக்கான் தீவுத் திட்டம் மொத்தம் 2,300 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

“முதல் கட்டம் 1,260 ஏக்கர் நிலத்தை மீட்டெடுப்பதை உள்ளடக்கியது, அதே நேரத்தில் இரண்டாம் கட்டம் மீதமுள்ள 1,040 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கும்.

“முழு மீட்பு செயல்முறைக்கும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று இன்று நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தின் போது தெலுக் பஹாங் சட்டமன்ற உறுப்பினர் முகமது காசிம் கேட்ட வாய்மொழி கேள்விக்கு ஜைரில் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும், மீட்புப் பணிகளில் எந்த நிலம் கையகப்படுத்துதலும் இடம்பெறவில்லை என்றும், ஏனெனில் இது முழுக்க கடலோர நீரில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஜைரில் குறிப்பிட்டார்.

“இருப்பினும், பத்து மாவுங்கை சிலிக்கான் தீவுடன் இணைக்கும் பான் தீவு இணைப்பு 2A (PIL2A) முதலாம் கட்டக் கட்டுமானத்திற்கு, பெர்மாத்தாங் டமார் லாவுட் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது அவசியமாகும்.

“இந்த கையகப்படுத்தல் 13 லோட் நிலங்கள் மற்றும் 17 குடியிருப்பு வீடுகள், இரண்டு வணிக வளாகங்கள், ஒரு சமூகநல மையம் மற்றும் ஒரு வழிபாட்டுத் தலம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

“இந்த செயல்முறை 1960 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்டது மற்றும் 2024 மே,8 அன்று மாநில சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் 2024 ஜூலை,11அன்று சட்டப் பிரிவு 8 இன் கீழ் அரசிதழில் வெளியிடப்பட்டது.

மதிப்பீடு மற்றும் சொத்துச் சேவை துறை (JPPH) நடத்திய முழுமையான மதிப்பீட்டை அடுத்து, 2024 டிசம்பரில் மாவட்ட நில நிர்வாகியின் முறையான விசாரணையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

“பெரும்பாலான நில உரிமையாளர்கள் ஒரு லோட் நிலத்திற்கு ரிம1.5 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீடு பெற்றுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“மேலும், சமூகப் பொறுப்புணர்வுக்கான எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, மூன்று நபர்களுக்கு தலா ரிம43,500 கருணைத் தொகை வழங்கப்பட்டது,” என்று ஜைரில் மேலும் கூறினார்.

மொத்தத்தில், PIL2A நிலம் கையகப்படுத்துதலுக்காக செலுத்தப்பட்ட இழப்பீடு ரிம24,154,948.73 ஆகும், கூடுதலாக ரிம130,500.00 கருணைத் தொகைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

“இந்தத் திட்டம் பினாங்கின் நீண்டகால மேம்பாட்டு உத்தியின் ஒரு முக்கிய பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது, மேலும் இது வெளிப்படையாகவும், பொறுப்புடனும், பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலனை முழுமையாகக் கருத்தில் கொண்டும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.