ஜார்ச்டவுன் – பொங்கல் கொண்டாட்டத்துடன் இணைந்து, பினாங்கு இந்து சங்கம் (PHA) அதன் சுயம்வரம் திட்டத்தின் கீழ் திருமணம் செய்த புதுமணத் தம்பதிகளுக்காக, முதன்முறையாக தலைப் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்தது.
இந்த விழா பினாங்கின் ஆயிர் ஈத்தாம் பகுதியில் அமைந்துள்ள ரோக்குமலை ஸ்ரீ முனீஸ்வரர் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

PHA தலைவர் டத்தோ பி. முருகையா கூறுகையில், தலைப் பொங்கல் என்பது புதிதாக திருமணம் செய்த மணமகளுக்கான ஒரு முக்கியமான பாரம்பரிய கலாச்சார விழாவாகும். இது மணமகள் தனது கணவரின் இல்லத்தில் கொண்டாடும் முதல் பொங்கல் விழாவை குறிக்கிறது. பாரம்பரியமாக, மணமகளின் குடும்பத்தினர் சீர் எனப்படும் சிறப்பு பரிசுகளை வழங்குவதோடு, புதிய மருமகனை வரவேற்க விருந்தோம்பலும் நடத்தப்படுவது வழக்கமாகும். இவ்விழா குடும்ப ஒற்றுமையையும், குடும்பங்களுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் மொத்தம் நான்கு ஜோடிகள் கலந்து கொண்டனர். அவர்கள் திரு–திருமதி சுகாந்த் சாரதி, திரு–திருமதி ஜெகன், மற்றும் திரு–திருமதி லோகநாதன் ஆகியோராகும்.
மேலும், சுயம்வரம் திட்டத்தின் மூலம் இணைந்த மற்றொரு ஜோடியான திரு–திருமதி ஆனந்தராஜ், இந்த விழாவில் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டில் பிறந்த தங்களது மகன் குகன் ராஜை பெருமையுடன் அறிமுகப்படுத்தினர்.
“பினாங்கு இந்து சங்கம் இந்த ஜோடிகளை எங்கள் நீட்டிக்கப்பட்ட குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. அழைக்கப்பட்ட தம்பதிகளுக்காக ஆலயத்தில் தலைப் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டு, விழாவின் முடிவில் அவர்களுக்கு சீர் வழங்கப்பட்டது,” என்று முருகையா தெரிவித்தார்.

சுயம்வரம் திட்டம் என்பது ஒரு இந்து திருமண முன்முயற்சி திட்டமாகும். இது பினாங்கு இந்து சங்கம், பினாங்கு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்து வருகிறது.
இன்றுவரை, இத்திட்டத்தின் கீழ் 10 ஜோடிகளை வெற்றிகரமாக இணைத்துள்ளதாக முருகையா கூறினார். அதில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது, மேலும் பலர் விரைவில் நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபர் தங்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையைக் கண்டறிய உதவும் நோக்கில், இலாப நோக்கற்ற சமூக சேவையாக செயல்படும் சுயம்வரம் திட்டத்திற்கு மலேசிய இந்துக்கள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம், மலேசிய இந்துக்கள், திருமணமாகாதவர்கள், விவாகரத்து செய்தவர்கள் (குழந்தைகள் உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள்), வாழ்க்கை துணையை இழந்தவர்கள் (குழந்தைகள் உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள்), அதே போல் தனித்து வாழும் பெற்றோர் மற்றும் உடல் ரீதியான சவால்கள் உள்ளவர்களுக்கும் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
“தற்போது, எங்களிடம் 101 பெண் விண்ணப்பதாரர்களும் 170 ஆண் விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர். விண்ணப்பதாரர்களின் சுயவிபரம் முழுமையாக இரகசியமாக கையாளப்படும்
என்பதை உறுதிப்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.