மத்திய அரசாங்கம் பினாங்கில் கூடுதலான பி.பி.ஆர் வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ.

பினாங்கு மாநில அரசு மக்கள் வீடமைப்புத் திட்டத்தில்(பி.பி.ஆர்) வீடுகள் பெறுநரின் மாதாந்திர வருமானம் ரிம1,500 என நிர்ணயித்த வேளையில் மத்திய அரசாங்கம் குறைந்த பட்ச வருமானமாக ரிம3,000 என அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசு கண்டனம் தெரிவித்தது.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கடந்த 13/9/2017-ஆம் நாள் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்துறை அமைச்சர் தான் ஸ்ரீ நோ பின் ஹஜி ஒமாரிடம் பினாங்கில் பி.பி.ஆர் வீடமைப்புத் திட்டம் கூடுதலாக நிர்மாணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் அமைத்துள்ள 102,118 பி.பி.ஆர் வீடுகளில் பினாங்கு மாநிலத்தில் மட்டும் 999 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன என கடந்த 24/5/2016-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநில அரசு கூடுதலான பி.பி.ஆர் வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ள விண்ணப்பத்துள்ளது. மேலும், மலேசியாவிலே பினாங்கு மாநிலத்தில் மட்டுமே மிக குறைவான பி.பி.ஆர் வீடுகள் கட்டப்பட்டன என்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் தெரிவித்தார்.

பி.பி.ஆர் வாடகை திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுநரே வீடுகள் பெறுவதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், மத்திய அரசு பி.பி.ஆர் வீடுகள் பெற குறைந்தபட்ச வருமான ரிம3,000 பெறலாம் என்ற அறிவிப்பை பினாங்கு மாநில அரசு பின்பற்றாது. அதேவேளையில், பினாங்கில் வீடுகள் பெறுநரின் குறைந்த வருமானமாக ரிம1,500 முடிவெடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் குறைந்த வருமானம் பெறுநருக்கு வீடுகள் பெறுவதற்கு இலகுவாக இருக்கும் என கூறினார்.

மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் ரிம1,500-க்கும் குறைவாக வருமானம் பெறுநர் பி.பி.ஆர் வீடுகள் பெறுவதற்கு தடைக்கல்லாக விளங்கும்.

பினாங்கில் பி.பி.ஆர் வீடுகள் பெறுநரின் மாதாந்திர வருமானம் ரிம1,500 என நிர்ணயிக்கப்பட்டதோடு பினாங்கு வீடமைப்புத் துறையிடமும் இந்த அணுமுறையைப் பின்பற்றி விண்ணப்பங்கள் பரிசீலணைச் செய்ய வேண்டும் என உத்திரவிடப்பட்டத்தாக திரு ஜெக்டிப் தெரிவித்தார்,

அதுமட்டுமின்றி இன்றைய தேதியில் பினாங்கில் பி.பி.ஆர் வீடுகள் பெற 1,662 பேர்கள் காத்திருக்கும் பெயர் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

வசதி குறைந்த பினாங்கு வாழ் மக்கள் பி.பி.ஆர் வீடுகள் பெறுவதை மாநில அரசு உறுதிச்செய்யும் என திரு ஜெக்டிப் கூறினார்.