நிபோங் திபால் – துரித வளர்ச்சி பெறும் தொழில்நுட்ப யுகத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) புதிய பரிணாமங்களை உருவாக்கி, இளம் மாணவர்களின் திறமைகள் மற்றும் புத்தாக்க எண்ணங்களைத் தூண்டுகிறது. இந்தத் துறையில் முன்னிலை வகித்து, காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்று செயல்படுவதே எதிர்கால வளர்ச்சிக்கு மூலதனமாக திகழ்கிறது.

கோடிங், நிரலாக்கம் மற்றும் AI தொடர்பான அனைத்திலும் நிபுணத்துவம் பெற்ற கற்றல் மையமான சிஸ்கோர் அகாடமி மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) திட்டங்களில் இளம் வயதினரின் பங்கேற்பை தீவிரமாக ஆதரித்து வருகிறது.

பினாங்கை தலைமையிடமாகக் கொண்ட இந்த அகாடமியின் சமீபத்திய முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. இந்த ஆண்டு தைவானில் நடைபெற்ற உலக ரோபோ விளையாட்டுகளில் (WRG) பங்கேற்க 24 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த மாணவர்கள், பெரும்பாலும் தமிழ்ப்பள்ளியைப் பின்புலமாகக் கொண்டவர்கள். இருப்பினும், பினாங்கில் உள்ள பல்வேறு இடைநிலைப் பள்ளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில், அகாடமியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் காளிதாஸ் கணேசன், இந்த ஆண்டுப் போட்டியில் மாணவர்கள் காட்டிய சாதனைகள் மிகவும் திருப்திகரமானவை என்றும், ஆற்றல்மிக்க இளம் மாணவர்கள் மாநிலத்தின் பெருமையாக இருப்பதால் இது பினாங்கு மாநிலத்திற்கே ஒரு முக்கிய வெற்றி எனக் கூறினார்.

“கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற WRG போட்டியில் எங்களது பங்கேற்பும், இந்த ஆண்டின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன்மூலம், மாணவர்கள் உற்சாகம் அடைந்து இந்த ஆண்டு நடைபெற்ற தைவான் போட்டியில்
சிறப்பாக செயல்பட ஊக்கமளித்தது என்று நான் நம்புகிறேன்.

இந்த ஆண்டு, சிஸ்கோர் அகாடமியிலிருந்து 24 மாணவர்கள் போட்டியில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக மூன்று முதல் நான்கு பிரிவுகளில் பங்கேற்றனர், சிலர் அதிகபட்சமாக ஆறு பிரிவுகளிலும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மொத்தமாக, இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் 80 பதக்கங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இது மாணவர்களின் மிகப் பெரிய சாதனையாகும். இந்தப் போட்டியில் பங்கேற்க, நாங்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பயிற்சியைத் தொடங்கினோம். மேலும், அந்த பயிற்சிகளும் விடாமுயற்சியும் இன்று பெற்ற வெற்றிக்கு உறுதியான சான்றாக அமைந்துள்ளன.
“இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான அறிவிப்புத் தருணத்திலிருந்து தொடங்கி, வெற்றிகரமாக முடித்து பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் (PIA) எங்களை வரவேற்கும் வரை, எங்கள் பயணத்தில் தொடர்ந்து ஊக்கமளித்து ஆதரித்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமுவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என அகாடமி இயக்குநர் காளிதாஸ் கூறினார்.
நவம்பர்,29 முதல் டிசம்பர்,1 வரை நடைபெற்ற மூன்று நாள் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிஸ்கோர், நாட்டில் மொத்தம் 12 கிளைகளைக் கொண்டுள்ளன, அவற்றில் ஐந்து பினாங்கில் செயல்படுகின்றன.
இந்த அகாடமியில் மொத்தமாக 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 150 பேர் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என அகாடமியின் நிறுவனர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
ரோபாட்டிக்ஸ், நிரலாக்கம், கோடிங் உள்ளிட்ட துறைகளில் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் இந்த அகாடமி, ஐந்து வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை வரவேற்கிறது.
“இந்த ஆர்வத்தை இளம் வயதிலேயே வளர்ப்பது மிகவும் அவசியம், ஏனெனில் என் அனுபவத்தின் அடிப்படையில், மாணவர்கள் இயற்கையாகவே திறமையும் ஆற்றலும் மிக்கவர்களாக உள்ளனர்,” என்றார்.
ஆறு பதக்கங்களை வென்ற அசம்ப்ஷன் அனைத்துலக மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயதான சச்சின் காளிதாசன், மாணவர்கள் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிட முடியும் என்பதை உறுதிசெய்ய முழுமையான பயிற்சியை வழங்கிய தனது பயிற்சியாளருக்கு நன்றித் தெரிவித்தார்.

“நான் ஏழு வருடங்களாக சிஸ்கோர் அகாடமியில் பயில்கிறேன். இந்த ஆண்டு WRG-ஐப் பொறுத்தவரை, நான் சொக்கர் 4×4 பிரிவின் கீழ் தங்கப் பதக்கத்தையும், W3 சொக்கர், AI புத்தாக்கம், சுமோ RC, ‘sumo family’மற்றும் ட்ரோன் சொக்கர் பிரிவுகளுக்கான வெண்கலப் பதக்கங்களையும் வென்றேன்,” என்று அவர் கூறினார்.
நேர்காணலின் போது கலந்து கொண்ட மற்ற மாணவர்களில், புக்கிட் ஜம்புல் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த தன்வீர் சண்முகநாதன் 3 பதக்கங்களும், புக்கிட் கம்பீர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த எஸ்வன் அர்வின் 1 பதக்கமும், கொன்வென் கிரீன் லான் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த அபிநயாஸ்ரீ ஸ்ரீகாந்த் 3 பதக்கங்களும் பெற்றனர்.
சுற்றுச்சூழல் மற்றும் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினரும் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழு தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, இந்த வெற்றியை ஒரு மிகப்பெரிய நம்பிக்கையின் அடையாளமாகக் கருதுகிறேன்.
தமிழ்க் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்துவது எனது முக்கியப் பொறுப்பாகும். குறிப்பாக STEM துறைகள், ரோபாட்டிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு மாணவர்கள் எளிதாக அணுகக்கூடிய வழிகளை உருவாக்குவதன் மூலம், நமது பிள்ளைகள் அனைத்துலக மேடைகளில் தங்கள் திறமையை நிரூபிக்க வழிவகுக்க முடியும்.
இந்தப் பயணத்தில் உறுதியாக துணை நின்ற சிஸ்கோர் அகாடமி, அதன் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் திறனை வளர்க்க விடா முயற்சியுடன் செயல்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.