ஜார்ச்டவுன் – 2026 ஆம் ஆண்டில், மக்களின் நல்வாழ்வை முதன்மை இலக்காகக் கொண்டு, மாநில வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக வாழ்வாதார பொருளாதாரம் அமையும்.
இன்று ஸ்ரீ பினாங்கு அரங்கத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் முதல் பொது சேவை ஊழியர்கள் உடனான சந்திப்பு கூட்டத்தில் நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தனது உரையின் போது இதனைத் தெரிவித்தார்.

“இந்தக் கூட்டம், ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கை எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், நிர்வாக நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள நேரடி தாக்கத்தையும் மதிப்பீடு செய்யும் சுயமதிப்பீட்டு அரங்கமாக திகழ்கிறது,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும் பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினருமான முதலமைச்சர் சாவ் இவ்வாறு விளக்கமளித்தார்.

தற்போதைய சூழலில், அரசாங்கத்தின் செயல்திறன் கொள்கை அறிவிப்புகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை; மாறாக, தொலைநோக்கு பார்வை சமூகத்தின் உண்மையான தேவைகளை எவ்வளவு திறம்பட பூர்த்தி செய்கிறது என்பதன் அடிப்படையில் அளவிடப்படுகிறது என்று கொன் இயோவ் தெரிவித்தார்.

தொடர்புடைய முன்னேற்றத்தில், 2028 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த வருவாய் கணக்கில் (AHD) நிதி நிலையை கிட்டத்தட்ட ரிம1 பில்லியனாக வலுப்படுத்தி மீட்டெடுப்பதற்கான நிர்வாகத்தின் உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
முன்னதாகப் பேசிய மாநிலச் செயலாளர் டத்தோஸ்ரீ சுல்கிஃப்லி லாங், நடப்பு மாநில அரசாங்கம் நிதி நிர்வாகத்தை விவேகமான மற்றும் நேர்மையான முறையில் தொடர்ந்து நெறிப்படுத்தும் என்று கூறினார்.

எனவே, நேர்மையான மற்றும் பொறுப்பான நிர்வாக அணுகுமுறையின் மூலம், கூட்டரசு மானியங்களைத் தவிர்த்து மாநிலத்தின் வருவாய் வசூல் சுமார் ரிம819 மில்லியனாக பதிவாகியுள்ளதுடன், மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாகப் பொது சீர்திருத்தங்களில் முன்னோடியாக பினாங்கு மாநிலம் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக சுல்கிஃப்லி தெரிவித்தார். ‘நிர்வாக நடைமுறைச் சீர்திருத்தம்’ தொடர்பான 20 திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதன் மூலம், இணக்கம் செலவுகளில் சுமார் ரிம 2.4 பில்லியன் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் முதலாம் துணை முதலமைச்சர், டத்தோ டாக்டர் முகமது அப்துல் ஹமீத்; இரண்டாம் துணை முதலமைச்சர், ஜக்தீப் சிங் டியோ; ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்; மாநிலத் துறைத் தலைவர்கள் மற்றும் துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.