பிறை – ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 2026’ திட்டத்தின் கீழ், பிறை தொகுதியைச் சேர்ந்த வசதிக் குறைந்த மாணவர்களுக்காக ரிம150 மதிப்பிலான பள்ளி உபகரணங்களுக்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி, புதிய கல்வியாண்டை தொடங்கும் பி40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேவையான பள்ளி உபகரணங்களை வாங்குவதற்கான உதவியை வழங்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. மாணவர்களின் கல்விப் பயணத்தை இனிதாகத் தொடங்கச் செய்யும் வகையில் பிறை சட்டமன்ற சேவை மையம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
“ஒவ்வொரு முன்முயற்சி மற்றும் நலத்திட்டங்களும் இனம், மதம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைத்து குடிமக்களுக்கும் உரியது.

“கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை ஆகும். இந்த உரிமையை பாதுகாப்பது அரசாங்கம், சமூகம் மற்றும் பெற்றோர் ஆகிய மூவரின் கூட்டுப் பொறுப்பாகும். மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் முயற்சிகளை ஆதரிப்பதில், குறிப்பாக அறிவு மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த எதிர்கால சந்ததியை உருவாக்குவதில் பினாங்கு மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.

பிறை தொகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” திட்டத்தில் பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில், வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு இதனைத் தெரிவித்தார்.
“இந்த விழா வெறும் உதவியளிக்கும் நிகழ்வாக மட்டும் அல்லாது, கல்வி மூலமாக நமது குழந்தைகளின் நலன் மற்றும் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் பகிர்ந்த பொறுப்பும், அக்கறையும் கொண்ட முன்முயற்சி திட்டமாக திகழ்கிறது, என்றார்.