புக்கிட் தெங்கா – உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) பெரிய உள்ளூர் நிறுவனங்களாக வளர்ச்சி பெற வேண்டும் என்பதே பினாங்கு மாநில அரசின் நோக்கம் என முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்
இன்று பிறை, ஹாலிடே இன் & சூட்ஸில் அமைந்த தங்கும்விடுதியில் YBS இன்டர்நேஷனல் பெர்ஹாட் நடத்திய முதலீட்டு மூலோபாய கையொப்பமிடும் விழாவில், சாவ் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்
“2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து 2012 ஆம் ஆண்டு ACE மார்க்கெட்டில் பட்டியலிடப்பட்டதுவரை YBS இன்டர்நேஷனல் மேற்கொண்ட வளர்ச்சி பயணமும், தற்போது வேகமடைந்து வரும் அதன் பிராந்திய விரிவாக்கப் போக்கும், தொலைநோக்கு பார்வை, ஒழுக்கமான நிர்வாகம் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகள் எவ்வாறு கனவுகளை நிஜமான சாதனைகளாக மாற்றுகின்றன என்பதற்கான வலுவான எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
“EXIM வங்கியின் ஆதரவுடன், இன்று கையெழுத்தான இந்த ஒப்பந்தம் இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
ஒரு உள்ளூர் SME நிறுவனம் உலகளாவிய சந்தையில் இடம்பிடித்து, தேசிய எல்லைகளுக்கு அப்பால் விரிவடையும் தொலைநோக்குடன் பெரிய உள்ளூர் நிறுவனமாக வளர்வதே மாநில அரசு பகிர விரும்பும் வெற்றிக் கதையாகும்; இது பிற SME-களுக்கான எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.
“YBS இன்டர்நேஷனலின் வரிசையில் அதிகமான SMEகள் இணைவதை மாநில அரசு வரவேற்கிறது. மேலும், அவர்களின் வளர்ச்சிப் பயணத்தில் SMEகளை ஆதரிப்பது எங்கள் பொறுப்பு,” என்று சாவ் மேலும் கூறினார்.
இந்த கையெழுத்து விழா, YBS இன்டர்நேஷனல் பெர்ஹாட், EXIM வங்கியை நிதி பங்காளியாகக் கொண்ட அல்லீட் நிறுவனத்தை கையகப்படுத்துவதைக் குறிக்கிறது என்று அறியப்படுகிறது.
இதற்கிடையில், EXIM வங்கியின் ஆதரவுடன் YBS இன்டர்நேஷனல் பெர்ஹாட் Allied நிறுவனத்தை கையகப்படுத்தியமை, அதன் பிராந்திய விரிவாக்கத் திட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்று சாவ் எடுத்துரைத்தார்.
“ஜோகூர் பாரு மற்றும் மலாக்காவில் திட்டமிடப்பட்ட புதிய வசதிகள் உடன் வியட்நாம் மற்றும் பாங்காக்கில் செயல்பாடுகள் விரிவடைவதால், YBS தன்னை ஒரு முக்கிய ASEAN பங்காளியாக நிலைநிறுத்திக் கொள்கிறது.
“இந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் எண்ணிக்கை 1,000 இலிருந்து 3,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக மதிப்புள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் விநியோகச் சங்கிலி இணைப்புகளை வலுப்படுத்தும்.
“இம்மாதிரியான வளர்ச்சி வலுவான நிதி கூட்டாண்மைகள் மூலம் சாத்தியமாகும். இந்த விஷயத்தில், EXIM வங்கியின் மூலோபாய ஆதரவை நான் பாராட்டுகிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தம், மலேசிய நிதி நிறுவனங்களின் மீது உள்ள நம்பிக்கையையும், உள்ளூர் நிறுவனங்களின் வலிமையையும், மேலும் பிராந்திய தொழில்துறை மற்றும் உற்பத்தி மையமாக பினாங்கு வளர்ந்து வரும் அந்தஸ்தையும் பிரதிபலிக்கிறது என்று சாவ் மேலும் கூறினார்.
சாவ்வின் கூற்றுப்படி, இந்த விரிவாக்கம் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வை மற்றும் மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை வலியுறுத்தும் புதிய தொழில்துறை வியூக திட்டம் 2030 ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.
“தொழில்துறை ஆட்டோமேஷன் மற்றும் நிலைத்தன்மை நடைமுறைகள் வளர்ச்சியடையும் போது, நமது மக்களுக்கு நீண்டகால நன்மைகளைத் தொடர்ந்து வழங்க வழிவகுக்கும்.

வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சர்வதேச அளவிலான போட்டியில் ஈடுபட துணியும் நிறுவனங்களுக்கு தாயகமாக இருப்பதில் பினாங்கு பெருமை கொள்கிறது என்று சாவ் தெரிவித்தார்
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) EXIM வங்கியின் தலைமை வணிக அதிகாரி ஃபைசா முஸ்தானா மற்றும் YBS குழும நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக்கி யோங் சான் சியா ஆகியோர் மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.