இலங்கை மனித உரிமை மீறல் எதிரான அனைத்துலக மாநாடு

ஐ.நா மனித உரிமைக் கழகம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பான 260 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை காண்பிக்கின்றார் இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி .
ஐ.நா மனித உரிமைக் கழகம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பான 260 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை காண்பிக்கின்றார் இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி .

கடந்த பல ஆண்டுகளாக இலங்கை நாட்டில் தமிழர்களுக்கு எதிராக இமைக்கப்பட்ட கொடுமையின் பிரதிபலிப்பு மரணங்கள், பாலியல் வன்முறைகள், நிலங்கள் மற்றும் உரிமைகள் பறிப்பு என தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இடமாகத் திகழும் இலங்கை நாட்டின் மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி .

எனவே, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில முக்கிய தீர்மானங்களை வெளிகொணர பினாங்கு தமிழர் முன்னேற்ற கழகம் வரும் நவம்பர் மாதம் ஜென் தங்கும்விடுதியில் இலங்கை மனித உரிமை மீறல் எதிரான அனைத்துலக மாநாட்டை (Penang International Forum on Human Rights Violations in Sri Lanka) நடத்தவுள்ளது. கடந்த செப்டம்பர் 16-ஆம் திகதி அன்று ஐ.நா மனித உரிமைக் கழகம் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பான 260 பக்கள் கொண்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த ஆய்வறிக்கையை முன்வைத்தே இம்மாநாடு நடத்தப்படவிருப்பதாகக் கூறினார் பேராசிரியர்.

இந்த ஒருநாள் கருத்தரங்கில் தமிழ்நாட்டை சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வைகோ அவர்கள் கலந்து சிறப்பிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை மட்டுமின்றி மலேசியாவிலும் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் நோக்கில் உள்ளூர் முக்கிய அரசியல் தலைவர்கள் சிறப்புரையாற்றுவர் என தெரிவித்தார் இக்கருத்தரங்கின் செயலாளர் திரு.சத்தீஸ் முனியாண்டி . இக்கருத்தரங்கில் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அனைத்துலக ரீதியான விசாரணை மற்றும் போர் குற்றங்களுக்கு நீதிமன்றம் அமைத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக நம்பப்படுகிறது.