தண்ணீர்மலை தைப்பூச விழாவிற்கு ரிம200,000 மானியம் – முதல்வர்

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால், மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங்
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால், மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங்

மலேசிய அளவில் பத்துமலை, கல்லுமலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு தண்ணிர்மலை ஆலயம் திகழ்கிறது என்றால் மிகையாகாது. இந்த ஆண்டு 230-வது முறையாக தைப்பூசத் திருவிழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது. தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குரிய விழாவானது ஒவ்வொரு வருடமும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது . அவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .
மலை உச்சியில் அமைந்திருக்கும் திருமுருகனைக் காண முதியவர்களும், சிறுவர்களும் சிரமத்தை மேற்கொள்வதால் 1 கோடி வெள்ளி செலவில் கூடிய விரைவில் மோனோ இரயில் கட்டவிருப்பதாகக் கூறினார் மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி. இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசாங்கமும் நிதியுதவி வழங்க வேண்டும் என்றார். மோனோ இரயில் திட்ட தொடர்பாக ஜப்பான் தனியார் மேம்பாட்டு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகக் கூறிவார்.
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ரிம200,000 மானியம் வழங்குவதாகக் கூறினார். மாநில அரசு தொடர்ந்து பல ஆண்டுகளாக மானியம் வழங்குவது பாராட்டக்குறியதாகும்.. அனைத்து மதத்தினரையும் மதிக்கும் நான் இலஞ்ச ஊழலை வன்மையாக எதிர்க்கிறேன் என்றார். மத மாற்றம் பிரச்சனையால் தனது பிள்ளைகளுக்காகப் போராடும் திருமதி இந்திராகாந்திக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

வண்ண மயில் காவடிகள்
வண்ண மயில் காவடிகள்

பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு நாடு முழுவதிலிருந்தும் பக்த கோடி பெருமக்கள் தங்கள் காணிக்கைகளைச் செலுத்த அலைகடல் போல் திரண்டனர். ஏறக்குறைய 1.3 லட்சம் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் வருகையளித்தனர்.. பினாங்கில் செட்டிப் பூசம் என்றழைக்கப்படும் தைப்பூச முதல் நாள் வெள்ளி இரத ஊர்வலம் அதிகாலை 6.00 மணிக்கு பினாங்கு வீதியில் அமையப்பெற்றுள்ள கோயில் வீட்டிலிருந்து நகரத்தார் ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டது. சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்ட தங்க முருகன் சிலை மிகவும் பிரகாசமாகக் காட்சியளித்தது. சாலையெங்கும் தேங்காய்கள் குழுமியிருக்க பக்தர்கள் கூட்டம் புடை சூழ வெள்ளி இரதம் பவனி வந்தது. இந்தியர்கள் மட்டுமன்றி, சீனர்களும் இலட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து முருகனுக்குத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினர்.
அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், பொது இயக்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சமூகப் பற்றாளர்களால் இவ்வாண்டு சுமார் 146 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அழகிய கலை வேலைபாடுகளையும் அலங்கரிப்புகளையும் கொண்ட பந்தல்களில் மக்களின் பசி தீர்க்க அன்னதானங்களும் தாகத்தைத் தீர்க்கக் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன. தைப்பூச முதல்நாள் மாலை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர், கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர் கீர் ஜொஹாரி ஆகியோர் தண்ணீர் பந்தல்களுக்கு வருகை புரிந்து மக்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தனர். பந்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்து வரவேற்றனர்.

 பால் குடம் ஏந்தி வரும் பக்தர்கள்
பால் குடம் ஏந்தி வரும் பக்தர்கள்

தைப்பூச முதல் நாள் தொடங்கி மக்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்கிவிட்டனர். பால் குடங்களையும் காவடிகளையும் ஏந்தியபடி மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருந்தனர். முருகப்பெருமானுக்கு விரதமும் சைவமும் மேற்கொண்டு முருகனின் வாசகத்தை உரக்கக் கூறியபடி பக்தர்கள் 513 படிகளைக் கடந்து திருக்குமரனைத் தரிசிக்கச் சென்றனர். இவர்களுடன் சீனப் பெருமக்களும் இணைந்து மஞ்சள் ஆடையுடுத்தி பால் குடங்களையும் அலகு குத்தி காவடிகளையும் ஏந்தி சென்றது மெய்ச்சிலிர்க்க வைத்தது. இந்திய நாட்டுக்கு வெளியில் உள்ள தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய முருகன் ஆலயமாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருள் சூழ்ந்த அவ்விடத்தையே ஒளிமயமாகக் காட்சியளிக்க வைத்தது மக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.