பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

பினாங்கு மாநில கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்.
பினாங்கு மாநில கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பு ஏழாவது முறையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநில அளவிலான கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 13-இல் பினாங்கு (St.Snne) தேவாலய வளாகத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநில அரசும் மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பு கழகமும் இணைந்து ஏற்பாடுச் செய்தனர். தொடர்ந்து ஏழாம் முறையாக நடைபெறும் இந்த மாநில அளவிலான கிறிஸ்துமஸ் விருந்துபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர். இந்தக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சிறப்பு வருகையளித்தார்.

பினாங்கு மாநில கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் சிறப்பு படைப்பு வழங்கிய நடனக் குழுவினர்.
பினாங்கு மாநில கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் சிறப்பு படைப்பு வழங்கிய நடனக் குழுவினர்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் நாட்டில் வளத்தையும் அமைதியும் நிலைநாட்ட அனைவரும் ஒன்றாக பாடுப்படுவோம் என சூளுரைத்தார். இவ்வாண்டுக்கான கருப்பொருள் “Emmanuel– God With Us” என்பதாகும். இதனிடையே, இம்முறை பினாங்கில் உள்ள அனைத்து தேவாலயங்களும் இணைந்து ஆறு கருணை இல்லங்களுக்கு உதவி நல்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாநில அளவிலானத் திறந்த இல்ல உபசரிப்பில் பினாங்கு மாநில பிரபல உணவு வகைகளான லக்சா பினாங், மீன் தலைக்கறி, சார் கோய் தியாவ், செண்டோல் மற்றும் பல இடம்பெற்றன. மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பின் தலைவர் திரு சாம் சுரேந்திரன் கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பிற்கு வருகை அளித்த அனைவரையும் வருக வருக என வரவேற்றதுடன் இவ்விழா நடைபெறுவதற்கு உறுதுணையாகத் திகழ்ந்த மாநில நம்பிக்கை கூட்டணி அரசிற்கும் மனமார்ந்த நன்றி மாலை சூட்டினார்.

இந்நிகழ்விற்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கிறிஸ்துவக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகிய முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லின மக்களும் கலந்து சிறப்பித்தனர்.