செபராங் ஜெயா – மாநிலத்தில் மகளிர் காற்பந்து விளையாட்டின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தாமான் சுப்ரீம் மைதானத்தை மேம்படுத்த மாநில அரசு ரிம80,000 நிதியுதவி வழங்கியுள்ளது.

செபராங் ஜெயாவில் உள்ள தி லைட் தங்கும் விடுதியில் இன்று நடைபெற்ற PIFC பாராட்டு விருந்தோம்பல் நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

2026-ஆம் ஆண்டுக்கான FAM மகளிர் லீக் பிரிவு 1 போட்டியில் பினாங்கு இந்தியர் காற்பந்து கழகம் (PIFC) சாம்பியன் பட்டம் வென்றதற்கு மாநில முதலமைச்சர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஜுன்,28 அன்று கெலானா ஜெயாவில் உள்ள PKNS விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெர்லிமா யுனைடெட் FC-ஐ 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, PIFC தனது அறிமுகப் பருவத்திலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்பியன் பட்டத்தை வென்றது தற்செயலாக நிகழ்ந்த வெற்றியல்ல என்று அவர் தெரிவித்தார்.

மாறாக, இந்த வெற்றி துல்லியமான திட்டமிடல், தொடர்ச்சியான பயிற்சி மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், கழக நிர்வாகம், பெற்றோர், தன்னார்வலர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க கூட்டு முயற்சியின் பலனாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்நிகழ்ச்சிவை ஏற்பாடு செய்த மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு மற்றும் டான் ஸ்ரீ டத்தோ ரமேஷ் ஆகியோருக்கும் முதலமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அதேவேளையில், மகளிர் விளையாட்டு வீராங்கனைகளின் வளர்ச்சியும் மாநில அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக அமைகிறது என்று சாவ் வலியுறுத்தினார்.

“பினாங்கு இந்தியர் காற்பந்து கழகத்தின் (PIFC) வெற்றி, வாய்ப்பு வழங்கப்பட்டால் மகளிரும் வரலாறு படைக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. இந்தச் சாதனை, குறிப்பாக இளம் பெண்களும் விளையாட்டுத் துறையில் தங்களது கனவுகளை தைரியமாகப் பின்தொடர ஊக்கமளிக்கும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பினாங்கு வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் மற்றும் PIFC தலைவர் ஸ்ரீ சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு கழகத்திற்கு தனிப்பட்ட பயிற்சி வசதியும் சொந்த மைதானமும் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், பிறை சட்டமன்றத் தொகுதியில் உள்ள தாமான் சுப்ரீம் எம்.பி.கே.கே பகுதியை அதற்கான சாத்தியமான இடமாக அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இந்த மைதானம் ஏற்கனவே சில மேம்பாட்டுப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், மேலும் விரிவான மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த மைதானத்தை தாமான் சுப்ரீம் எம்.பி.கே.கே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, PIFC-இன் அதிகாரப்பூர்வப் பயிற்சி மற்றும் போட்டி மைதானமாக பயன்படுத்த அனுமதிப்பதே தனது திட்டம் என டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.
இதன் மூலம், போட்டிகளை நடத்துவதற்கான சிறந்த வசதிகளை உருவாக்குவதுடன், வலுவான அணிகளை ஈர்த்து, PIFC இன் போட்டித் திறனை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
“கழக நிர்வாகத்துடன் இணைந்து, சுமார் ரிம100,000 செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அடையாளம் கண்டுள்ளோம். இதில் மைதானத்தைச் சமப்படுத்துதல், புதிய புல்வகைகளை நடுதல், மின்விளக்குகள் அமைத்தல் மற்றும் பயிற்சி, போட்டிகளுக்குத் தேவையான இதர வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்,” என்றார்.
இத்திட்டத்திற்கு ரிம80,000 நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் பினாங்கு இந்தியர் காற்பந்து கழகம் (PIFC) எதிர்கொண்ட பயணம் எளிதானது அல்ல என அதன் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
போதியப் பயிற்சி வசதிகள் இல்லாமை, நிதி சவால்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆதரவைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை எதிர்கொண்ட போதிலும், வீரர்கள், பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர் மற்றும் ஆதரவாளர்களின் அர்ப்பணிப்பால் இந்தக் கழகம் தொடர்ந்து முன்னேறி சாதனைகளைப் படைத்துள்ளதாக அவர் கூறினார்.