ஆயிர் ஈத்தாம் – மாநில அரசு, மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து, பினாங்கில் உள்ள இந்திய சமூகத்திற்கான அனைத்து முன்முயற்சி திட்டங்களும், குறிப்பாக மனித மூலதன மேம்பாட்டை மையமாகக் கொண்டு, பயனளிக்க உறுதி செய்கிறது.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை பினாங்கு இந்து அறப்பணி வாரியம்(PHEB) வாயிலாக மாநில அரசு மொத்தம் ரிம4.92 மில்லியன் கல்வி உதவித்தொகையை 3,755 மாணவர்களுக்கு வழங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

“2024 ஆம் ஆண்டு மட்டும், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் (IPT) வெற்றிகரமாக மேற்கல்வி தொடர வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்கும், மலேசிய கல்வி சான்றிதழ் (SPM) மற்றும்
மலேசியா உயர் கல்வி சான்றிதழ்
(STPM) ஆகிய தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்கும் ரிம111,900 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது ஒரு சிறிய எண்ணிக்கையல்ல, மாறாக, பினாங்கு இந்திய சமூகத்தின் இளம் தலைமுறையினரை உருவாக்குவதில் மாநில அரசின் மிகப்பெரிய முதலீட்டை இது குறிக்கிறது. அவர்கள் திறன் மிக்கவர்களாகவும் போட்டித்தன்மையும் கொண்டவர்களாகவும், அதே நேரத்தில் பினாங்கின் மனித மூலதன வளர்ச்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாகவும் உருவாக்கப்படுவர்,” என்று அவர் பினாங்கு மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் இவ்வாறு கூறினார்.

இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களான (TYT), மாநில ஆளுநர் துன் ரம்லி நகா தாலிப் மற்றும் அவரது மனைவி தோ புவான் ராஜா நூரா ஆஷிகின் ராஜா அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசு துறைத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
