சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த சமயம் வழிகாட்டியாகத் திகழ்கிறது – சோங் எங்

தஞ்சோங் பூங்கா-” மலேசியர்கள் பல்லின மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு சமயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து சமயப் போதனைகளும் நமது தினசரி வாழ்க்கையில் சகோதரத்துவம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நன்னெறிப் பண்புகள் பின்பற்றி நல்லிணக்கத்தை மேலோங்க வழி வகிக்கிறது. சமயம் என்பது பிளவுக்கான அறிகுறி அல்ல மாறாக ஒற்றுமையின் சின்னம்,” என மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில பேரவையின் 42-வது திருமுறை ஓதும் விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் இவ்வாறு கூறினார்.

மாநில அரசாங்கம் சமயம் மற்றும் சமூகநலன் மிக்க திட்டங்களுக்குத் தொடர்ந்து நல்லாதரவு அளிக்கும் என மகளிர் & குடும்ப மேம்பாடு, பாலின ஈடுபாடு, இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினருமான சோங் எங் கூறினார்.

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை சமயம் மட்டுமின்றி பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையிலும் பல நிகழ்வுகள், வகுப்புகள் மற்றும் பட்டறைகள் வழிநடடுத்துவதைப் பாராட்டிய சோங் எங் ரிம5,000 மானியத்திற்கான மாதிரி காசோலையும் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்க தேசிய துணைத் தலைவரும் சி.எம் கோபாலன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநிலப் பேரவையின் தலைவர் திரு.மா.முனியாண்டி உரையாற்றுகையில், மலேசிய இந்து சங்க அதிகாரப்பூர்வ பாடல் வரியான ஒன்று சேருவோம், ஒன்று சேருவோம்என்று பாடும் போது உறுப்பினர்கள் உற்சாகம் கொள்கின்றனர். சங்க உறுப்பினர்கள் நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் நடத்துவதில் மட்டும் உற்சாகம் கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழ்ந்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்றார்.

இவ்விழாவில் பெற்றோர்கள் உட்பட 1200 பேர்கள் கலந்து கொண்டனர். தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், பேச்சுப் போட்டி, திருமுறை பதிகப் பாராயணம், பஞ்சபுராணம் என சமயம் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.
பினாங்கு மாநில அளவிலான திருமுறை ஓதும் போட்டியில் 12 வட்டாரப் பேரவையைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்கள் இம்மாநிலத்தைப் பிரதிநிதித்து வருகின்ற செப்டம்பர் 16-ஆம் நாள் பத்து மலையில் நடைபெறும் தேசிய ரீதியிலான திருமுறை ஓதும் போட்டியில் கலந்து கொள்வர்