பட்டர்வொர்த் – ஜாலான் சீராமில் நவீன இந்து தகன மையம் அமைக்கும் திட்டத்திற்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு (PHEB) கூடுதலாக ரிம1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரிம2.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என். இராயர் கூறுகையில், ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட ரிம1.5 மில்லியன் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தப் போதுமானதாக இல்லை என்றார். குறிப்பாக, கட்டிடம் அமைப்பதற்கும் நவீன தகன உபகரணத்தை நிறுவுவதற்குமான செலவு அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“கூடுதலாக ரிம1 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரிம2.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.
“ஆரம்பத்தில் கிடைத்த ரிம1.5 மில்லியன் மூலம் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவது சிரமமாக இருந்திருக்கும். கட்டிடம் அமைப்பதுடன், அதிக செலவுடைய நவீன தகன உபகரணத்தையும் வாங்க வேண்டியுள்ளது.
“மேலும், நகர்ப்புறப் பகுதியில் இந்த வசதி அமைக்கப்படுவதால், அதிகாரிகள் நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்குவதுடன்,
‘modern filtration system’ அமைப்பும் இதில் இடம்பெற வேண்டும்,” என்றார்.
பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களின் தேவைகள் சமமான முறையிலும் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதில் மத்திய அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையே இந்தக் கூடுதல் நிதி பிரதிபலிப்பதாக இராயர் தெரிவித்தார்.
இந்தக் கூடுதல் நிதியைப் பெறுவதற்காக இராயரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கூறுகையில், கூடுதல் நிதி கிடைத்துள்ளதன் மூலம் செபராங் பிறை இந்து சமூகத்தினருக்கான நவீன தகன வசதியை அமைக்கும் திட்டத்தை வாரியம் முழு முயற்சியாக முன்னெடுக்க முடியும், என்றார்.
கடந்த ஆறு மாதங்களாக இத்திட்டத்திற்கான ஆரம்பப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, அரசாங்கக் கொள்முதல் விதிமுறைகளுக்கு ஏற்ப திறந்த குத்தகை செயல்முறையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“ஒப்பந்தப்புள்ளி செயல்முறை நிறைவடைந்துள்ளது. ஒப்பந்ததாரரை நியமிப்பதற்கும் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆலோசகர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் வெற்றிபெற்ற ஒப்பந்ததாரரை நியமித்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்வார்கள்.
“கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். அதேவேளையில், தகன உபகரணங்களை கொள்முதல் செய்ய சுமார் ஆறு மாதங்கள் தேவைப்படும்,” என்றார்.
இந்த வசதி, பாரம்பரிய தகன முறைகளுக்கு மாற்றாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, நவீனமான மற்றும் தரநிலைகளுக்கு இணங்கிய வசதியை வழங்கும் என்றும் குமரன் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு ஏற்ப நவீன தகன உபகரணமும் நவீன வடிகட்டுதல் அமைப்பும் இத்திட்டத்தில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, கூடுதல் நிதி கோரிக்கைக்கு சாதகமாகப் பதிலளித்த மத்திய அரசாங்கத்திற்கு லிம் குவான் எங் நன்றி தெரிவித்தார்.
நவீன தகன மையத்தை அமைப்பதற்கான கட்டுமானச் செலவு அதிகமாக இருப்பதால், கூடுதலாக ரிம1 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது நியாயமானது என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டம் நிறைவுபெற்றதும், பினாங்குத் தீவில் அமைந்துள்ள பத்து லஞ்சாங் நவீன மின்சார தகன மையத்திற்கு அடுத்ததாக, பினாங்கின் இரண்டாவது நவீன மின்சார தகன மையமாக இது அமையும்.
இதனிடையே, ஜாலான் மெங்குவாங், பாகானில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் மண்டபம் விரிவான சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் செப்டம்பர் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்படும் என்றும் இராயர் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் இந்த மண்டபம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
மண்டபத்தின் கழிப்பறைகள், குழாய் அமைப்புகள், கூரை மற்றும் இதர வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மண்டபத்தைப் பயன்படுத்துவோருக்கு மேலும் வசதியான மற்றும் சிறந்த சூழல் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.