பினாங்கின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த 100 ஆண்டுகால பாரம்பரிய சிறப்பு விருதளிப்புத் திட்டம் அறிமுகம்

Admin

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு மாநில 100 ஆண்டுக்கான சிறந்த பாரம்பரிய விருதளிப்புத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

பினாங்கு மாநில அரசு, சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு அலுவலகம் (PETACE) ஏற்பாட்டுக் குழுவினராகவும், பினாங்கு மாநில பாரம்பரிய ஆணையர் அலுவலகம் செயலகமாகவும், மற்றும் பிரதான ஆதராவாளர்களின் ஒத்துழைப்பில் இத்திட்டம் செயல்பாடுக் காண்கிறது.

“மாநில அரசு இத்திட்டத்தை பினாங்கு வளர்ச்சியில் ஒரு நூற்றாண்டு காலமாக
சிறந்த முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் வழங்கிய அனைத்து தரப்பினருக்கும்
அங்கீகாரம் வழங்க அறிமுகம் செய்கிறது.

“பினாங்கில் முன்னதாகவே அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்ற இரண்டு (2) பாரம்பரிய பொக்கிஷங்கள் உள்ளன. அவை கலாச்சார பாரம்பரிய பிரிவின் கீழ் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான ஜார்ச்டவுன் மற்றும் பினாங்கு இயற்கை பாரம்பரிய தல வகையின் கீழ் புக்கிட் பெண்டேரா உயிர்க்கோள இருப்பு தலமாகத் திகழ்கிறது. மேலும், தேசிய பாரம்பரியச் சட்டம் 2005 இன் கீழ் மரபுச் சின்னமாக அரசிதழ் செய்யப்பட்ட 11 கட்டிடங்கள் இடம்பெறுகின்றன.


“மாநில அரசு பாரம்பரிய தலங்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள ஏஜென்சிகள் மூலம் இத்தலத்தை தொடர்ந்து பராமரிப்பதை உறுதிசெய்ய மேலாண்மைத் திட்டத்தைத் தயாரித்து புதுப்பித்து வருகிறது,” என முதல்வர் கொம்தார் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

மேலும், யுனெஸ்கோ ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய தல சிறப்பு பகுதி திட்டம் (மாற்றுத் திட்டம்) மற்றும் புக்கிட் பெண்டேரா சிறப்பு பகுதி திட்டம் (மாற்றுத் திட்டம்) இன்னும் தயாரிப்பு நிலையில் இருக்கிறது. இது இரண்டு பாரம்பரிய தலங்களைப் பராமரிக்கும் வழிகாட்டியாக இடம்பெறுகிறது.

அதுமட்டுமின்றி மாநில அரசு, பினாங்கு மாநில பாரம்பரியச் சட்டம் 2011 மற்றும் பினாங்கு மாநில பாரம்பரிய விதிகள் 2016 ஆகியவற்றை அரசிதழ் செய்து பினாங்கு மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் பொக்கிஷங்களை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட ஓர் உரிய நடவடிக்கையாகும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

பினாங்கு மாநில பாரம்பரியச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி, எந்தவொரு கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தையும் மாநில பாரம்பரியமாக அறிவிப்பதன் மூலம் அதன் செயல்பாடுகளை நிர்வகிக்க மாநில பாரம்பரிய ஆணையர் நியமிக்கப்படுகிறார்.

இந்நிகழ்ச்சியில், இரண்டாம் துணை முதல்வர், பேராசிரியர் ப.இராமசாமி; சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின்; உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரீல்.கீர் ஜோஹாரி; மாநில பாரம்பரிய ஆணையர், ரொஸ்லி நோர்; ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய ஒருங்கிணைப்பு பொது மேலாளர் (GTWHI), டாக்டர். தி மிங் சீ மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் காணப்படும் பாரம்பரியம் மற்றும் வரலாறு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தலமாக இருப்பதாக சூன் ஹின் கூறினார்.

பினாங்கு மாநில 100 ஆண்டுக்கான சிறந்த பாரம்பரிய விருதளிப்புத் திட்டத்தின் மூலம்
இதுவரை மாநிலத்தின் பாரம்பரியத்தை பாதுகாத்து மற்றும் பராமரித்து வந்த
சங்கங்கள், நிறுவனங்கள், வணிகங்கள், மையங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் பினாங்கு மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத் தனித்துவத்தை நிலைநிறுத்தவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிக்க அனைத்து தரப்பினரையும் ஊக்குவிப்பதாகவும், நம்புகிறேன்.

இத்திட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஜுலை,20 முதல் செப்டம்பர்,30 வரையில்
https://www.penang.gov.my/warisan அகப்பக்கத்தை அணுகி இலவசமாகப்
பங்கேற்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

“இந்த விருதைப் பெற தேர்ந்தெடுக்கப்படும் தனிநபர்கள் அல்லது சங்கங்கள் பினாங்கில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான எந்தவொரு விளம்பரம் அல்லது திட்டத்தில் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.