பினாங்கு இரண்டாம் துணை முதலமைச்சராக ஜக்டிப் சிங் டியோ நியமனம்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சராக ஜக்டிப் சிங் டியோ இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான அவர், மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறையை வழிநடத்துவார்.

“மூன்றாவது முறையாக ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவியேற்கும் தமக்கு இரண்டாம் துணை முதலமைச்சர் பதவி அங்கீகாரமாகக் கருதுகிறேன்,” ஜக்டிப் கூறினார்.

முன்னதாக இரண்டு தவணை ஊராட்சி, வீட்டுவசதி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினராக சேவையாற்றினேன். தற்போது வழங்கப்பட்ட மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறையை முன்னெடுத்துச் செல்வேன்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் ஜக்டிப் இவ்வாறு கூறினார்.

இரண்டாம் துணை முதலமைச்சர் என்ற முறையில், மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், முதலாம் துணை முதலமைச்சர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹாமிட் என அனைவருடன் கைக்கொர்த்து பினாங்கு அரசாங்க நிர்வாகத்தை வழிநடத்த ஒருங்கிணைந்து செயல்படுவேன், என்றார்.

பினாங்கு மாநில மக்களின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்குச் சிறந்த சேவையாற்றுவேன்.


பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பட்டியலில் இரண்டாவது இந்தியராக டத்தோஶ்ரீ சுந்தராஜு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு,61 சொத்துடைமை தொழிலுக்குப் புதியவர் அல்ல.

முன்னதாக சுந்தராஜு, மலேசிய EcoWorld நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், துணைத் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பதவி வகித்து வந்தார். அதற்கு முன்பு, எஸ்.பி செத்தியா குழுமத்தின் சொத்துப் பிரிவின் (வடக்கு) பொது மேலாளராகவும் பணியாற்றினார். சுந்தராஜூ 31 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவின் சொத்து துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது மறுப்பதற்கில்லை.

அவர் ஏழ்மையான தொடக்கத்திலிருந்து வந்தவர். குடும்பத்தை நடத்துவதற்கும் தனது கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் இரண்டு வேலைகள் செய்ததாக, சுந்தராஜு கூறினார்.

“நான் காலையில் பாதுகாவலராகவும், இரவில் வாடகைக் கார் (டாக்ஸி) ஓட்டுநனராகவும் வேலை செய்ய வேண்டியிருந்தது,” என்று சுந்தராஜு மேற்கோள் காட்டினார்.

சுந்தராஜூ வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டார்.