பிறை – அண்மையில் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு அவர்களின் ஏற்பாட்டில் தீபாவளி அன்பளிப்பு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் விழா பிறை சாய் லெங் பார்க் சமூக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், பிறை சட்டமன்ற தொகுதியின் சார்பாக மொத்தம் 700 குடும்பங்களுக்கு, தலா ரிம120 மதிப்பிலான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனை பிறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சேவை மையத்தினால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடத்தப்பட்ட தீபாவளி நற்பணித் திட்டமாகும். கடந்த ஆண்டில் 580 குடும்பங்கள் பயனடைந்த நிலையில், இம்முறை 700 பேராக அதிகரித்துள்ளது.

“இது சிறிய உதவி என்றாலும், பெறுநர்களின் முகத்தில் பிரகாசித்த மகிழ்ச்சி எனக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. அவர்களின் நன்றியுணர்வு இந்த முன்முயற்சி திட்டத்திற்கு மிகுந்த அர்த்தத்தை அளித்தது,” என்று வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், பிறை சட்டமன்ற தொகுதி மக்கள் அனைவருக்கும், இன, மத வேறுபாடின்றி நலனும் ஒற்றுமையும் நிலவச் செய்வதே தமது கடமை என்றும் இத்தகைய சமூகப் பணிகள் ‘Perai Kita’ எனும் கருப்பொருளிலும், Penang2030 இலக்கை அடையும் நோக்கையும் பிரதிபலிக்கின்றன,” என்றும் அவர் கூறினார்.

இந்த முன்முயற்சி திட்டம் பண்டிகை காலத்தில் வசதிக் குறைந்த பொது மக்கள் எதிர்நோக்கும் நிதிச் சுமையைக் குறைக்க உதவுகிறது, என்றார்.

இந்த நிறைவு விழாவில், அவர் அனைத்து மக்களுக்கும் இதயப்பூர்வமான தீபாவளி நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
“தீப ஒளி நம் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் சமாதானமும் பொழியட்டும்,” என்றும் அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.