வடகிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 223 உயர்க்கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

ஜார்ச்டவுன்-பினாங்கு நம்பிக்கை கூட்டணி அரசு  10 ஆண்டுகளாக உயர்க்கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் இத்திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்துகிறது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் வடகிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 223 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை க்கான காசோலை வழங்கும் நிகழ்வில் இவ்வாறு தெரிவித்தார்.

“தொடக்கத்தில் 2008-ஆம் ஆண்டு இத்திட்டத்தின் ஊக்கத்தொகையாக ரிம500 கொடுக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டு முதல் ரிம1000-ஆக அதிகரிக்கப்பட்டது,” என பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கொன்  யாவ் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே  லாய் ஹெங், ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் இங் சூன் சியாங், பத்து லன்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஒங் ஆ தியோங், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் மற்றும் வடகிழக்கு மாவட்ட அதிகாரி ரொஸ்லி அலிம் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு வடகிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 223 மாணவர்களுக்கு உயர்க்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டன. மாநில அரசு இந்த மாவட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரிம197,800 மானியத்தை ஒதுக்கியுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கை சுமையினால் அவுதியூறும் பெற்றோர்களின் பணச்சுமையை குறைக்கும் நோக்கத்தில் மாநில அரசு இம்மானியத்தை வழங்குவது பாராட்டக்குறியதாகும்.

கணக்கியல் துறையில் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவி பவித்ரா, 21 மாநில அரசின் ஊக்கத்தொகை அடுத்த தவணைக்கானக் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயில்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.