வின்னர் ஸ்கை நிறுவனம் பினாங்கில் இரண்டாவது ஆலை விரிவாக்கம், ரிம60 மில்லியன் எதிர்கால முதலீட்டுத் திட்டம் அறிவிப்பு

Admin
img 20260604 wa0116

பத்து காவான் – வின்னர் ஸ்கை டெக்னாலஜி மலேசியா சென் பெர்ஹாட் (Winner Sky Technology Malaysia Sdn. Bhd) நிறுவனம், பினாங்கில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, தனது வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லைப் பதித்துள்ளது.

இந்த புதிய முதலீடு, உயர் மதிப்புடைய உற்பத்தித் துறைக்கான விருப்பமான முதலீட்டு இலக்காக பினாங்கு தொடர்ந்து திகழ்வதை உறுதிப்படுத்துகிறது.
img 20260604 wa0082

இந்நிறுவனத்தின் விரிவாக்கம், பினாங்கின் வலுவான தொழில்துறை சூழல் அமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் மீது உலகளாவிய உற்பத்தியாளர்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கையை பிரதிபலிப்பதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

img 20260604 wa0101

சீனா, வியட்நாம் மற்றும் மலேசியாவில் செயல்பட்டு வரும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகள் (EMS) நிறுவனமான வின்னர் ஸ்கை டெக்னாலஜி, பினாங்கிலுள்ள தனது புதிய உற்பத்தி ஆலையில் ரிம10 மில்லியன் முதலீடு செய்துள்ளது. மேம்பட்ட தானியங்கு தொழில்நுட்பங்கள் மற்றும் அதிநவீன உற்பத்தி வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதி, நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
img 20260604 wa0115

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பினாங்கில் மேலும் ரிம60 மில்லியன் முதலீடு செய்யும் வின்னர் ஸ்கை டெக்னாலஜி நிறுவனத்தின் உறுதிப்பாட்டை முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் வரவேற்றார்.
இது, பினாங்கின் வணிகச் சூழல் மற்றும் தொழில்துறைத் திறன்களின் மீது இந்நிறுவனம் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

மேலும், பினாங்கின் நிலையான தொழில்துறைச் சூழல், வலுவான விநியோகச் சங்கிலிகள் மற்றும் திறன்மிக்க மனிதவளமே தொடர்ந்து தரமான முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய காரணிகளாக அமைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் பொருளாதார சாதனைகளை எடுத்துரைத்த பினாங்கு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், 2025ஆம் ஆண்டில் பினாங்கு ரிம22.4 பில்லியன் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி முதலீடுகளைப் பெற்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதில் ரிம15.2 பில்லியன் அந்நிய நேரடி முதலீடுகளாகும். மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (E&E) துறை மட்டும் ரிம11.3 பில்லியன் முதலீடுகளுடன் முன்னணி பங்களிப்பாளராகத் தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் சுமார் பாதி விரிவாக்கத் திட்டங்களாக இருப்பது, பினாங்கின் பொருளாதார எதிர்காலத்தின் மீது தற்போதைய முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் முன்னணி ஏற்றுமதி மாநிலம் என்ற நிலையை பினாங்கு தக்கவைத்துக் கொண்டு, ரிம574 பில்லியன் ஏற்றுமதியைப் பதிவு செய்து நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 36 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

மலேசியாவின் மின்னணு மற்றும் மின்சார (E&E) ஏற்றுமதியில் மட்டுமே ரிம437 பில்லியன், அதாவது 68 சதவீத பங்களிப்பை பினாங்கு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், வின்னர் ஸ்கை டெக்னாலஜி நிறுவனம் தனது அனைத்து செயல்பாட்டு நிலைகளிலும் 100 சதவீத மலேசியர்களை பணியமர்த்தியிருப்பதை முதலமைச்சர் பாராட்டினார். இது உள்ளூர் பணியாளர்களின் தரம் மற்றும் போட்டித்திறனை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தின் தொழில்துறைச் சூழலை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, உள்ளூர் தொழில்துறைத் திறன்களை வலுப்படுத்தவும், பன்னாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நோக்கம்கொண்ட முன்னெடுப்புகளாக, இன்வெஸ்ட்பினாங்க் (InvestPenang) சமீபத்தில் தொடங்கிய பினாங்கு தானியங்கி சோதனை உபகரண (ATE) வளாகம் மற்றும் பினாங்கு ATE திறன் வரைபடத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முன்னெடுப்புகளின் கீழ் உள்ள வாய்ப்புகளை ஆராயுமாறு வின்னர் ஸ்கை டெக்னாலஜி நிறுவனத்தை அவர் ஊக்குவித்தார்.

பினாங்கில் செயல்பாடுகளை விரிவுபடுத்தியதற்காக ஆல்ட்ரானிக்ஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான லாம் யின் கீ மற்றும் வின்னர் ஸ்கை டெக்னாலஜி மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் லாம் சீ டாய் ஆகியோருக்கு சாவ் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

முதலீடுகளை எளிதாக்கவும் தொழில் கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் InvestPenang, MITI, MIDA மற்றும் MATRADE ஆகியவற்றுடன் இணைந்து பினாங்கு மாநில அரசு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

“பினாங்கு ஒரு மீள்திறன் மிக்க மற்றும் நம்பகமான முதலீட்டு இடமாகத் தொடர்கிறது. வின்னர் ஸ்கை டெக்னாலஜி நிறுவனம் அதன் புதிய வளர்ச்சி அத்தியாயத்தைத் தொடங்கும் நிலையில், தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, புதுமைகளை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.