ASF -இல் பாதிக்கப்பட்ட பன்றி வளர்ப்பாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வலியுறுத்து

Admin

 

ஜார்ச்டவுன் – ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சலால்(ASF) பாதிக்கப்பட்ட பன்றிகளை அப்புறப்படுத்துவதற்கு பினாங்கு கால்நடை மருத்துவச் சேவைத் துறையுடன் (JPV) வெளிப்படைத்தன்மையுடன் இருக்குமாறு பன்றி வளர்ப்பாளர்களை முதல்வர் சாவ் கொன் இயோவ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வைரஸ் பரவுவதைத் தடுக்க பன்றி வளர்ப்பாளர்கள் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றும், கால்நடை மருத்துவச் சேவைத் துறை முன்னர் அறிவிக்கப்பட்ட இழப்பீடுச் சீராக வழங்கப்படுவதையும் உறுதி செய்வதும் முக்கியம், என்றார்.

“நேற்றைய நிலவரப்படி (ஜனவரி 23), பினாங்கில் மொத்தம் 21 பண்ணைகள் ASF வைரஸால் பாதிக்கப்பட்டது.

“தற்போதைய நிலவரப்படி, சுமார் 4,000 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளன; மேலும் வரும் நாட்களில், நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பன்றிகளையும் அழிக்க சம்பந்தப்பட்ட துறை தனது முயற்சிகளைத் தொடரும்.

ஜனவரி,23 அன்று ஸ்பைஸ் அரங்கில் தனது சீனப் புத்தாண்டு திறந்த உபசரிப்பில் செய்தியாளர் சந்திப்பின் போது, ​​பன்றி வளர்ப்பாளர்கள் வழங்கும் தகவல்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், என நம்பிக்கை தெரிவித்தார்.

மாநில கால்நடை மருத்துவச் சேவைத் துறை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், பினாங்கில் 124 பன்றி பண்ணைகள் உள்ளன.

வட செபராங் பிறை மாவட்டத்தில் 64 பண்ணைகள், தென் செபராங் பிறை மாவட்டத்தில்
(52), மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (4) மற்றும் தீவில் நான்கு உள்ளன.