பத்து உபான் – அண்மையில், பி40 குழுவினருக்கான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (PeKa B40) கீழ் செயல்படுத்தப்படும் ‘Mobile Clinic 4U’ திட்டம், புக்கிட் ஜம்புல் வளாகத்தில் நடைபெற்றதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு இலவச சுகாதாரப் பரிசோதனைச் சேவைகளை வழங்கியது.

பத்து உபான் மற்றும் புலாவ் பெத்தோங் ஆகிய மாநிலத் தொகுதிகளின் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு செயற்குழுவினர் (JPWK) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திட்டம், 84 பங்கேற்பாளர்களை வெற்றிகரமாக ஈர்த்தது.

இத்திட்டத்தின் கீழ் இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை அளவு, உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றைப் பரிசோதித்தல், அத்துடன் இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மற்றும் சிறுநீரகச் செயல்பாடு குறித்த மதிப்பீடுகள் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், மனநலப் பரிசோதனைகள் மற்றும் ‘MySalam’ சேவை மையமும் இதில் இடம்பெற்றிருந்தன.

இத்திட்டமானது ‘ஹெல்த் பிளஸ் கிளினிக்’, ‘பந்தாய் மருத்துவமனை பினாங்கு’, டி’ஹோம் மனநலச் சங்கம் மற்றும் மைசலாம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசிய பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், பல்வேறு தொற்றா நோய்களின் ஆரம்பக் கட்டங்களில் தெளிவான அறிகுறிகள் தென்படாததால், அவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்குத் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள் மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, நிதி நெருக்கடி, நேரமின்மை அல்லது போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாகத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள இயலாதவர்களுக்கு, சுகாதாரச் சேவைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கொண்டு சேர்ப்பதில் நடமாடும் மருத்துவ முகாம்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“சிகிச்சை பெறுவதற்கு உங்கள் உடல் எச்சரிக்கை அறிகுறிகளைக் காட்டும் வரை காத்திருக்க வேண்டாம். கிடைக்கக்கூடிய சுகாதாரப் பரிசோதனை வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அத்துடன், தேவைப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரப் பணியாளர்களிடம் ஆலோசனை பெறுங்கள்,” என்று அவர் கூறினார்.
அதேவேளை, ‘ரஹ்மா’ ரொக்க உதவித் தொகை (STR) பெறுநர்கள் மற்றும் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அவர்களது பதிவு செய்யப்பட்ட வாழ்க்கைத் துணைவர்களுக்கு இலவச சுகாதாரப் பரிசோதனைகளை வழங்கும் ‘PeKa B40’ திட்டத்தைத் தகுதியுள்ள பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், புலாவ் பெத்தோங் சட்டமன்றத் தொகுதி மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின் (JPWK) தலைவரும், புக்கிட் ஜம்புல் பேரங்காடியின் மக்கள் தொடர்பு மற்றும் நிகழ்ச்சி மேலாளருமான அஸ்விர்னா டத்தோ சுகூர் கூறுகையில், உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தேவைப்படும்போது உளவியல் ரீதியான உதவியை நாட பொதுமக்கள் தயங்கவோ அல்லது வெட்கப்படவோ கூடாது என்றும் குறிப்பிட்டார், என்றார்.
மேலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் சிறுநீரக நோய் போன்ற பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், அவை தீவிரமடையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்
சுகாதார சேவைகளுடன், சமூக மேம்பாடு முயற்சிகளின் ஒரு பகுதியாக, தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் பி40 குழுவைச் சேர்ந்தவர்கள் வருமானம் ஈட்டவும் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தவும் உதவும் வகையில் விற்பனை கடைகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசுக் பைகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. அத்துடன், பத்து உபான் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழு (JPWK) ஏற்பாடு செய்திருந்த அதிர்ஷ்டக் குலுக்கலிலும் அவர்கள் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
பத்து உபான் JPWK இன் தலைவர் நூர் ஹஸ்லினா முகமது இஸ்மாயில் மற்றும் மனநல நிபுணர் டாக்டர் பாரதி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.