ஜார்ச்டவுன் – பினாங்கில் அனுமதியற்ற இஸ்லாமிய அல்லாத வழிபாட்டு தலங்கள் (RIBI) தொடர்பான பிரச்சனைகளை சட்டத்தின்படி, ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் மற்றும் நீண்டகால சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் அணுகுவதில் மாநில அரசு உறுதியான, கொள்கைமிக்க மற்றும் சமநிலையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் பேசுகையில், தற்போதுள்ள பிரச்சனைகளை கவனமாக தீர்ப்பதோடு, எதிர்கால கட்டிட வளர்ச்சிகள் அனைத்தும் சட்டப்பூர்வ அனுமதிகளுடன் மட்டுமே அமைய வேண்டும் என்பதையே மாநில அரசின் அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்றார்.
“அனுமதியின்றி புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டால், நடப்பு சட்டங்களும் கொள்கைகளும் அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் மாநில சட்டமன்ற அமர்வில் இன்று அவர் கூறினார்.
அதேவேளையில், ஏற்கனவே அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு நடைமுறை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையிலான அணுகுமுறையை மாநிலம் பின்பற்றுகிறது என்றும் அவர் விளக்கமளைத்தார்.
“ஏற்கனவே இருக்கும் கட்டிடங்கள் தொடர்பாக, அவற்றை சட்டப்பூர்வமாக்குதல், மாற்று இடங்களுக்கு மாற்றுதல் அல்லது பொருத்தமான மாற்று நிலங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள்
சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை
மற்றும் நில வசதியைப் பொருத்து மேற்கொள்ளப்படும்,” என்றார்.
இது போன்ற பிரச்சனைகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும், நீடித்த மற்றும் முறையான தீர்வுகளை உறுதிசெய்யவும், இந்த நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செயல்முறையை ஒருங்கிணைப்பதற்காக, மாநில நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் துறையின் கீழ் “பினாங்கு இஸ்லாமிய அல்லாத வழிபாட்டு தலங்கள் ஒருங்கிணைப்பு குழு” அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய மேம்பாட்டு திட்டங்களில் RIBI தலங்களை ஒதுக்குவது உள்ளாட்சி அமைப்புகளால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத வழிபாட்டு தளங்கள் சட்டபூர்வமாகவும் திட்டமிட்ட முறையிலும் உருவாக்கப்படுவதை உறுதிசெய்யப்படுகிறது.
“இந்த அணுகுமுறை அனுமதியற்ற அமைப்புகளின் பிரச்சனையை குறைப்பதோடு, சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும்,” என்று லிம் கூறினார்.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த லிம், மாநில அரசு 1976ஆம் ஆண்டின் நகர மற்றும் புறநகர் திட்டமிடல் சட்டத்தையும் உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதல்களையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது, என்றார்.
அனைத்து RIBI திட்டங்களும் ஊராட்சி மன்றங்களிடமிருந்து திட்டமிடல் அனுமதி மற்றும் கட்டிடத் திட்ட அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதியற்ற கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
தேசிய அரசாங்க ஊராட்சி மன்றத்தின் மூலம் தேசிய வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யும் கூட்டரசு அரசின் முயற்சிகளுக்கும் மாநில அரசு ஆதரவு அளித்து வருகிறது.
“RIBI தொடர்பான திட்டமிடலும் அமலாக்கமும் தற்போதுள்ள சட்டங்களும் வழிகாட்டுதல்களும் அடிப்படையில் முறையாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் நடைபெறுவதை மாநிலம் தொடர்ந்து உறுதிசெய்கிறது,” என்றார்.
2026 ஜனவரி நிலவரப்படி, மாநில நகர் மற்றும் ஊரக திட்டமிடல் துறை, கட்டிடத் திட்ட அனுமதி இல்லாத 136 RIBI அமைப்புகளை கண்டறிந்துள்ளது. இதில் 115 அமைப்புகள் பினாங்கு மாநகர் கழகத்தின் வரம்பில் உள்ளன; மேலும் 21 அமைப்புகள் செபராங் பிறையில் உள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும் மாநில ஒருங்கிணைப்பு குழுவிற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.
நிர்வாகத்தைத் தாண்டி, சமூக அதிகாரமளித்தல் மற்றும் மதங்களுக்கு இடையிலான புரிதலை வளர்ப்பதும் மாநிலத்தின் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என லிம் வலியுறுத்தினார்.
RIBI சிறப்பு நிதி உதவி திட்டத்தின் மூலம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளுக்கான நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பு மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்த eRIBI டிஜிட்டல் முறைமையும் வலுப்படுத்தப்படுகிறது.
இளைஞர்களை இலக்காகக் கொண்ட “ஜெலாஜா ஹார்மோனி” உள்ளிட்ட ஹார்மோனிகோ திட்டங்களும், மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
“திறமையான RIBI நிர்வாகமும் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு திட்டங்களும் இணைந்து, பினாங்கின் பல்வகை சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை நிலைநிறுத்த மாநில அரசின் முயற்சிகளுக்கான அடித்தளமாக அமைகின்றன,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, குமரன், மத விவகாரங்கள் பொறுப்புடனும் உண்மைத்தன்மையுடனும் கையாளப்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்களை நினைவூட்டினார்.
“முழுமையான தகவல்கள் இல்லாமல் அவசரமாக வெளியிடப்படும் கருத்துக்கள் நிலைமையை மேலும் மோசமாக்கி, பொறுப்பற்ற தரப்பினரின் தவறான பயன்பாட்டுக்கு இடமளிக்கும்,” என்றார்.
அத்துடன், “நீதி, மனிதநேயம், மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை” அடிப்படையில் தீர்வுகள் அமைய வேண்டும்; அரசியல் அழுத்தம் அல்லது தற்காலிக பொது உணர்வுகளை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த லிம், உள்ளாட்சி அமைப்புகள், நில அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் சமூக பிரதிநிதிகள் இணைந்த பல்துறை அமைப்பு ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பதாக கூறினார்.
“இந்த பிரச்சனை அரசியலாக்கப்படவோ அல்லது இன, மத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தப்படவோ கூடாது என்பதில் மாநில அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.