ஆசியா விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்குச் சன்மானம் – மாநில முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – கடந்த 30 நவம்பர் தொடங்கி 11 டிசம்பர் வரை பிலிப்பின் நாட்டில் நடைபெற்ற ஆசியா விளையாட்டுப் போட்டியில் (சீ விளையாட்டி போட்டி 2019) பினாங்கு மாநில போட்டியாளர்களும் நம் நாட்டை பிரதிநிதித்து களமிறங்கி வெற்றிவாகை சூடியுள்ளதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு குறிப்பிட்டார்.

பினாங்கு மாநிலத்தை பிரதிநித்து 70 விளையாட்டாளர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்கி 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 11 பதக்கங்கள் பெற்று அனைத்துலக ரீதியில் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளனர் என மாநில முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். சீ விளையாட்டு போட்டியில் நம் நாடு 56 தங்கம், 57 வெள்ளி மற்றும் 71 வெண்கலம் பெற்றுள்ளது பாராட்டக்குரியதாகும்.

எனவே, இந்த விளையாட்டு வீரர்களின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் பினாங்கு மாநில அரசு சன்மானத்தை அனைத்து வெற்றியாளர்களுக்கும் பகிர்ந்தளித்தது. 2014-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தச் சன்மானம் வழங்கும் திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு ஊந்துசக்தியாகத் திகழ்வதுடன் அவர்களை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். 2014 முதல் 2020-ஆம் ஆண்டு வரை பினாங்கு மாநில அரசு ரிம1,047,300.00 மானியத்தை விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்காக வழங்கியுள்ளது பாராட்டக்குரியது.

விளையாட்டாளர்கள் இந்த வெற்றியை நல்லதொரு ஆரம்பமாக கருதி இன்னும் அனைத்துலக ரீதியில் பல வெற்றிகளை பினாங்கு மாநிலத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ, பினாங்கு விளையாட்டுச் சங்க தலைமை அதிகாரி பெடரிக் டான், பினாங்கு விளையாட்டுக் கழக பிரதிநிதிகள் மற்றும் வெற்றியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.