கம்பீரமானத் தோற்றத்துடன் புதிய தங்க இரதம் பவனி – இராமசாமி

    கெபுன் பூங்கா– “பக்தர்களால் நன்கொடை வழங்கப்பட்டு புதியதாக அமைக்கப்பட்ட தங்க இரதம் முருகப் பெருமானின் கவசமான வேல்ஏந்தி கொண்டு கம்பீரமாக பவனி வரும். அதுமட்டுமின்றி தங்க இரதம் இழுத்துச் செல்வதற்கு ‘tug-machine’ எனும் இயந்திர உதவியுடன் மக்கள் வழிநடத்திச் செல்வர்,” என இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாண்டும் தங்க இரதத்தில் வேல் முன்னோக்கிச் செல்ல பின் தொடர்ந்து முருகப்பெருமான் வெள்ளி இரத்ததில் பக்தர்களுக்கு அருள் காட்சியளிப்பார்.

    இரதங்கள் இழுத்துச்செல்ல மிருகங்கள் குறிப்பாக காளைமாடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பினாங்கு ஆலயங்களில் மட்டுமின்றி மலேசியாவில் வீற்றிருக்கும் ஆலய இரத ஊர்வலத்திலும் காளைமாடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என  வலியுறுத்தினார். பழைய தங்க இரதம் தண்ணீர்மலை ஆலய ஊர்வலத்திற்குப் பயன்படுத்தப்படும் என அறிவித்தார்.

    தைப்பூச கொண்டாட்டத்தின் முதல் நாளன்று பினாங்கு அருள்மிகு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் தங்க இரத ஊர்வலம் லெபோ பந்தாய் குயீன் ஸ்திரிட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 9.00 மணி அளவில் ஆலயத்தைச் சென்றடையும் என பேராசிரியர் குறிப்பிட்டார்.

          தங்க இரதம் ‘Queen Street- இருந்து புறப்பட்டு Chulia Street, Victoria Street, Prangin Road, Magazine Road, Jalan Datuk Kramat, Jalan Utama மற்றும் Jalan Kebun Bunga வழியே வந்து தண்ணீர்மலை ஆலயத்தை வந்தடையும்.

    இந்த ஆண்டு, தண்ணீர்மலை ஆலயத்திலிருந்து மகா மாரியம்மன் ஆலயத்தை நோக்கி மீண்டும் புறப்படும் தங்க இரத ஊர்வலப் பாதையில் சில மாறுதல்கள் இடம்பெறுகிறது. சம்பல் ஸ்திரிட் பாதையிலிருந்து சுலியா ஸ்திரிட் பாதைக்குச் சென்று லிட்டல் இந்தியா வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊர்வலம் வரும், என இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ இராமசந்திரன் கூறினார்.

      கடந்த 2018-ஆம் ஆண்டு 800,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் வருகையளித்த வேளையில் இந்த ஆண்டு 1.3மில்லியன் மக்கள் திரளாக வருகையளிப்பர் என எதிர்ப்பார்ப்பதாக ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம் கூறினார். கடந்த ஆண்டு பக்தர்கள் முருகப்பெருமானுக்கு 500 காவடிகள், 30,000 பால் குடங்கள் மற்றும் 600 முடி காணிக்கை செலுத்தப்பட்டன.

    மேலும், இந்த ஆண்டு மக்களின் தாகம் மற்றும் பசியைப் போக்கும் வண்ணம் 160 தண்ணீர் பந்தல்கள் நிருவப்பட்டுள்ளன. . எனவே, அன்னதானமாகப் பெறப்படும் உணவுகளை விரயமாக்குவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

     பக்தகோடிகள் அமைதியான முறையில் சமய நெறியோடும் பக்தியுடனும் தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் ஆசிப்பெற அழைக்கப்படுகின்றனர்.