சோலோக் யோர்க், இராமர் ஆலயத்திற்கு ரிபி நிதியம் – ஜெக்டிப்

சோலோக் யோர்க், இராமர் ஆலயம்

டத்தோ கெராமாட் பினாங்கு மாநிலம் 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தள நிதியம்(ரிபி)  ரிம50,000 வரை விண்ணப்பிக்கலாம் என இராமர் ஆலயத்திற்கு வருகையளித்த போது இவ்வாறு அறிவித்தார் உள்ளூராட்சி, கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. இதுவரை இந்த நிதியத்தில் ரிம5 மில்லியன் 129 இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு  வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

  சோலோக் யோர்க், இராமர் ஆலயத்தில் கூரை பழுது அடைந்துள்ளதை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் அவ்வாலய நிர்வாகக் குழுவினரிடம் ரிம 50,000-க்கான  ரிபி உதவித்தொகைக்கான மாதிரி காசோலையை எடுத்து வழங்கினார் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் சிங் டியோ.

இதனிடையே, பினாங்கு மாநிலத்தின் இந்த ரிபி திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என ஜெக்டிப் கேட்டுக்கொண்டார். இன்னும் அதிகமான ரிபி நிதியம் பெறக்கோரி மத்திய அரசிடம் விரைவில் விண்ணப்பம் செய்யப்படும் எனவும் தமதுரையில் குறிப்பிட்டார். இதன் மூலம்,  இன்னும் அதிகமான இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் பயன்பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தல நிதியம் மூலம்  129 மேம்பாட்டுத் திட்டங்கள் அதாவது 38 இந்து ஆலயம், 6 குருத்வாரா, 19 தேவாலயம் மற்றும் 66 சீனக்கோவில் ஆகிய தலங்களுக்கு இதுவரை ரிம4.98 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும். 

இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் தங்களின் வழிபாட்டு தள மேம்பாட்டுக்கு இன்னும் ரிம3,804,146.78 தொகை எஞ்சியுள்ள வேளையில் நிர்வாகத்தினர் விண்ணப்பங்கள் அனுப்ப அழைக்கப்படுகின்றனர். ஏற்கனவே நிதியம் வழங்கப்பட்ட வழிபாட்டு தலங்களும் மற்றொரு புதிய மேம்பாட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். 

இவ்வாண்டு பொங்கல் கொண்டாட்டத்தின் அன்று இந்த இராமர் ஆலயத்திற்கு இம்மானியம் வழங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சி என தமதுரையில் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார். இதனிடையே, அனைத்து இந்தியர்களுக்கு இவ்வாண்டு வளமான மகிழ்வான ஆண்டாக அமைய வேண்டும் என தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் திரு.ஜெக்டிப்.