ஜாவி தொகுதி தமிழ்ப்பள்ளி 150 மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டு

ஜாவி – “மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக உருவாகுவதற்கு கல்வி அடித்தளமாகத் திகழ்கிறது. எனவே, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க
கூடுதல் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும்
கல்வி கற்க வேண்டும்.

“மாணவர்கள் ஆரம்பப் பள்ளி முதல் இடைநிலைப் பள்ளி, உயர்கல்வி என தொடர்வதற்குக் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவது அவசியமாகும்.

“அரசு சாரா நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் பினாங்கு மாநிலத்தில் வசதிக் குறைந்த மாணவர்களுக்குத் தேவையானப் பள்ளி உபகரணங்கள், பட்டகைக் கணினிகள், மடிக் கணினிகள் வழங்கி வருவது வரவேற்கத்தக்கது,” என ஜாவி சட்டமன்ற உறுப்பினர் இங் மோய் லாய், ஜாவி தொகுதி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.
கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், ஜாவி தொகுதி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி உபகரணப் பொருட்கள் வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டுகள் எடுத்து வழங்கினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல்
நேஷன் கேட் சொலுஷன் சென். பெர்ஹாட் நிறுவனம், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் கொடுத்து வருகின்றது. ஜாவி தொகுதியில் அமைந்திருக்கும் ஐந்து தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

அவை கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி, ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி, சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி; பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி என 150 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

“வசதிக் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டு வழங்குவதன் மூலம் பெற்றோர்களின் சுமையைக் குறைக்க முடிகிறது,” என்று சட்டமன்ற உறுப்பினர்
இங் மோய் லாய் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கல்வி அமைச்சரும் நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபட்லினா சிடேக்; நேஷன் கேட் சொலுஷன் சென். பெர்ஹாட் நிறுவன, மேம்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் சி.கே தான்; பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பள்ளி உபகரணப் பொருட்களை நிபோங் திபால் ‘Yawata’ பேரங்காடியில் வாங்குவதற்கு ரிம80 மதிக்கத்தக்கப் பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த நிறுவனம் கடந்த ஆண்டுகளில் கோவிட்-19 தொற்றுநோய் காலக்கட்டத்தில் மாணவர்கள் இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் மேற்கொள்வதற்குத் தட்டைக் கணினிகள்(tablet); இரவல் திட்டத்தின் கீழ் மடிக்ணினிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அரசு சாரா நிறுவனங்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நிதியுதவி வழங்குவது பாராட்டக்குரியது.

“பிப்ரவரி,20 முதல் தொடங்கும் மலேசிய கல்வி சான்றிதழ்(எஸ்.பி.எம்) தேர்வுச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, வெள்ள அபாயம் ஏற்படும் மாநிலங்களில் கல்வி அமைச்சகம் (KPM) செயல் திட்டத்தைத் திட்டமிட்டுள்ளது.

மாநில கல்வி இலாகா (ஜே.பி.என்) அனைத்து சூழ்நிலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. மேலும், வெள்ளக் கட்டுப்பாட்டு அறையும் தயார் நிலையில் இருப்பதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், ஜாவி தொகுதி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், ஜாவி தொகுதி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி உபகரணப் பொருட்கள் வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டுகள் எடுத்து வழங்கினார்.