தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு பற்றுச்சீட்டு – குமரேசன்

புக்கிட் ஜம்புல் – பத்து உபான் சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்வு புக்கிட் ஜம்புல் மைடின் பேரங்காடியில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கலந்து சிறப்பித்தார்.

வசதிக்குறைந்த மாதுவுக்கு தீபாவளி பற்றுச்சீட்டு எடுத்து வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் திரு.குமரேசன்.

“பத்து உபான் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்றக் கழகம் மற்றும் பத்து உபான் சட்டமன்ற சேவை மைய உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வசதி குறைந்த குடும்பங்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மூத்தக்குடிமக்கள் மற்றும் உடல்பேறு குறைந்தவர் ஆகியோருக்கும் இப்பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதாக,” சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார் .

இதனிடையே, பொது மக்களுக்கு பரிசுக்கூடை அல்லது பொருட்கள் அன்பளிப்பாக வழங்காமல் பற்றுச்சீட்டு வழங்கவதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு விருப்பமானப் பொருட்களை வாங்க இயலும் என மேலும் தெரிவித்தார்.

வசதிக்குறைந்த குடும்பங்களை சார்ந்த சிறியவர் முதல் பெரியவர் வரை அவர்களுக்கு விருப்பமான பொருட்கள், ஆடை அணிகலன்களை வாங்கி மகிழும் வகையில் இந்நிகழ்வு மைடின் பேரங்காடியுடன் நடத்தப்பட்டது பாராட்டக்குரியதாகும்.

மேலும், சிறு நிதிதொகை வழங்கப்பட்டாலும் வசதிக்குறைந்த குடும்பங்களை சார்ந்த மக்களுக்கு இது பேருதவியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன். விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி கொண்டாட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வளத்தையும் வழங்க வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.