தொழில்முனைவோர் மற்றும் தலைமைத்துவம் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்களை PWDC தொடர்ந்து கையாளும்

Admin
977b2af2 6e30 4801 b191 220487e42368

ஜார்ச்டவுன் – மாநில அரசு, பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தொழில்முனைவோர், சமூகத் தலைமைத்துவம் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாடு ஆகிய துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

 

பினாங்கு பெண் தொழில்முனைவோர் வழிகாட்டுதல் திட்டம் (PenMentor) மூலம், பெண்கள் தொழில்முனைவோர் பயிற்சி அமர்வுகள், வழிகாட்டுதல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகுப்புகள் மற்றும் வணிக ஒருங்கிணைப்பு வாய்ப்புகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று சமூக மேம்பாடு, சமூகநலன் மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் கூறினார்.

 

“இத்திட்டத்தின் தாக்கத்திற்கு உதாரணமாக, புக்கிட் தெங்கா பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழு (JPWK), தி கார்டன் சமூக மையத்தை நிறுவுவதற்காக SeJaTi மடானி நிதியிலிருந்து ரிம100,000 மானியத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது.

 

“இந்த மையம் இப்போது உள்ளூர் பெண்கள் வருமானம் ஈட்டவும் குடும்ப நல்வாழ்வை மேம்படுத்தவும் ஒரு தளமாக செயல்படுகிறது,” என்று அவர் 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது பதவிக்காலத்தின் இரண்டாவது கூட்டத்தின் வாய்மொழி கேள்வி பதில் அமர்வில் இவ்வாறு விளக்கினார்.

 

கூடுதலாக, பினாங்கு எழுத்தறிவு சமூக சங்கத்துடன் (PENITI) இணைந்து PWDC அரசியலில் பெண்கள் தலைமைத்துவ திட்டத்தை (WELIT) ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

 

“WELIT திட்டம், மகளிர் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்திலிருந்து (PERANTIS) RM50,000 நிதியைப் பெற்றுள்ளது, இது மகளிர் மேம்பாட்டுத் துறை, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (KPWKM) கீழ் செயல்படுகிறது.

 

“இந்தத் திட்டம் பொதுக் கொள்கை, மூலோபாயத் தொடர்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றில் ஒரு தீவிர பயிற்சி தளமாகும்” என்று சுங்கை பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் லிம் விளக்கினார்.

 

மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான மொத்தச் செலவு ரிம654,840 என்றும், அதில் ரிம413,440 மாநில அரசிடமிருந்து ஒதுக்கப்பட்டது என்றும், மீதமுள்ளவை மாநில நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசால் பங்களிக்கப்பட்டன என்றும் அவர் விளக்கினார்.