பாதுகாப்பான மண்டலங்களில் இருக்கும் பள்ளிகள் செயல்பட, கல்வி அமைச்சு உத்தேசிக்க வேண்டும் – சொங் எங்

ஜார்ச்டவுன்- கல்வி அமைச்சு அனைத்து பள்ளிகளையும் முழுமையாக மூடக்கூடாது, மாறாக மஞ்சள் அல்லது பச்சை மண்டலங்களில் அமைந்துள்ள பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இதனால் மாணவர்கள் தங்கள் படிப்பில் மேலும் பின்வாங்க மாட்டார்கள் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் கூறினார்.

தற்போது இணைய வழி கற்றல் புதிய இயல்பில் நடைமுறைக்கு கொண்டு வந்தாலும், 37 விழுக்காடு மாணவர்களுக்கு எந்த கற்றல் சாதனமும் இல்லை என்பதில் தான் மிகுந்த கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.

“எனவே, கல்வி அமைச்சு 2020-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பிந்தங்கிய மாணவர்கள் தங்கள் கல்வியை அனைத்து பிரிவுகளிலும் முன்னெடுத்துச் செல்ல உத்தேசிப்பதோடு நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டும். இல்லையேல் மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்க முடியாது,” என எடுத்துரைத்தார்.

மாநில பணிக்குழு, அமைச்சு மற்றும் ஒய்.தி.எல் போன்ற பெருநிறுவன ஆகியோரின் ஒத்துழைப்பில் செயல்படுவதன் மூலம்
மாணவர்களுக்கு மின் கற்றல் சாதனங்கள் வழங்க உதவ முடியும்,” என இன்று கொம்தாரில் நடைபெற்ற ஒய்.தி.எல் அறக்கட்டளை மற்றும் ஒய்.தி.எல் தொடர்புத்துறை நிறுவன
மின் கற்றல் சாதனங்கள் வழங்கும் விழாவில் இவ்வாறு கூறினார்.

மாநில அரசின் பினாங்கு மின் கற்றல் கணினி
திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒய்.தி.எல் அறக்கட்டளை மற்றும் ஒய்.தி.எல் தொடர்புத்துறை நிறுவன ஒருங்கிணைப்பில் YES 4G விவேக கைப்பேசியுடன் 12 மாத இலவச 120GB கொண்ட 4G தரவு சேவையுடன் 224 மாணவர்களுக்கு
வழங்கப்படும்.

மின் கற்றல் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசுடன் இணைந்து தனியார் நிறுவனங்களும் கைக்கோர்த்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் வலியுறுத்தினார்.

மாநில அரசு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் தொடங்கி இன்று வரை மாணவர்கள் மின் கற்றல் கல்வியை பயிலும் சூழலுக்கு ஏற்ப பினாங்கு மின் கற்றல் கணினி திட்டத்தின் மூலம் கணினி, மடிக்கணினி அல்லது இணையச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

கணினி சாதன கடனுதவி திட்டத்தில் இதுவரை 233 மடிக்கணினிகளும், புதுப்பிக்கப்பட்ட இலவச கணினி திட்டத்தில் 323 கணினிகள் மாணவர்களுக்கும், 97 கணினிகள் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டன.

அண்மையில் கூட்டரசு அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடந்த நவம்பர்,7-ஆம் தேதி அறிவித்ததுடன் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து மின் கற்றல் உபகரணங்கள் பெறுவதற்காக மாநில அரசிற்கு அதிகமான தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டன.

பினாங்கு மின் கற்றல் கணினி திட்ட பணிக்குழு மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகள் உதவியுடன் மூன்று நாட்களிலே 250 பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் சேகரிக்கப்பட்டன.

” கோவிட்-19 தாக்கத்தால் பள்ளிகளில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் மாநில அரசின் சீன மற்றும் மிஷினரி பள்ளிகளுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரிம 198,000 நிதி 250 கணினிகள் வாங்க பயன்படுத்துவதாக, முதல்வர் விளக்கமளித்தார்.

‘வீட்டிலிருந்து கல்வி கற்போம்’ என்ற திட்டம் ஒய்.தி.எல் தொடர்புத்துறை நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டங்களில் (சி.எஸ்.ஆர்) ஒன்றாக திகழ்வதாக அதன் இயக்குநர் விங் கே.லீ கூறினார்.