பிறை – பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள சில ஆலய நில நிலை மற்றும் கட்டிட அனுமதிகளுக்கான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, ஆலய நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற பினாங்கு அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
“உடனடி வாக்குறுதிகளை எங்களால் வழங்க முடியாது, ஆனால் தொடர்ச்சியான ஆதரவையும், பிரச்சனைகளைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற உறுதியை அளிக்க முடியும்,’ என்று அவர் இன்று பிறை, ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் 300 வசதிக்குறைந்த குடும்பங்களுக்கு பரிசுக்கூடை மற்றும் பாராட்டு விருந்தோம்பல் வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.”
சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுவதே எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும் என்று சாவ் வலியுறுத்தினார்.
“நீங்கள் சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றினால், எதிர்காலத்தில் சமாளிக்க வேண்டிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது,” என்று அவர் கூறினார்.
“குறிப்பாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நில உரிமை மற்றும் சட்டப்பூர்வமாக்கல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில், வழிபாட்டுத் தலங்களுக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.”
வழிபாட்டுத் தலங்கள் குறித்து அண்மைய மாதங்களில் பரவலாக எழுப்பப்பட்டது குறித்து அறிவதாக சாவ் குறிப்பிட்டார்.
“ஓர் அரசாங்கம் என்ற முறையில், மாநில மக்களுக்கு நாங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்பை நன்கு உணர்ந்துள்ளோம்,” என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
சுமார் 300 பக்தர்களுக்குப் பயனளிக்கும் ஒரு திட்டம் உட்பட, சமூக நல முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நன்கொடையாளர்களையும் ஆலய நிர்வாக குழுவினர்களையும் அவர் பாராட்டினார்.
“தற்போது 23-வது ஆண்டில் தொடரப்படும் இந்த முன்னெடுப்புத் திட்டம், கருணை, பெருந்தன்மை மற்றும் வலுவான சமூக உணர்வைப் பிரதிபலிக்கிறது.
பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுகளுக்காக மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடுகளைத் தொடர்ந்து வழங்கும் என்றும் சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.
“மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உறுதி செய்வதற்காக, ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடுகளைத் தொடர்வோம்,” என்று அவர் கூறினார்.
பக்தர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் உகந்த சூழலை வழங்கும் நோக்கில், ஆலய மேம்பாட்டுப் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு சிறந்த முறையில் கும்பாபிஷேக விழாக் கொண்டாடப்பட்டது.
பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்ந்து ஒத்துழைக்க நல்குவதாக உறுதியளித்தார்.
மேலும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அறங்காவலர் வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன், ஆலயத் தலைவர் மேஜர் சேகரன், தி லைட் ஹோட்டல் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ ரமேஷ், பினாங்கு மாநகர் கழக மேயர் டத்தோ Ir.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்ச்சியில் பெருநிறுவன சமூகப் பொறுப்பின் அடிப்படையில் ஆறு அரசு சாரா அமைப்புகளுக்கு உதவும் நோக்கில் மாதிரி காசோலையும் வழங்கப்பட்டது.
