மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு மாநிலம் சமூகநலத்திட்டங்கள் மேற்கொள்ள புதிய இடத்தில் அலுவலகம் அமைக்கத் திட்டம்

ஜோர்ச்டவுன் – மலேசிய  இந்துதர்ம மாமன்ற பினாங்கு  மாநிலம் முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர்.
    மலேசிய  இந்து தர்ம  மாமன்ற பினாங்கு மாநிலத் தலைவர் நந்த குமார்,  செயலாளர் தனபாலன், துணை பொருளாலர் விக்கினேஸ், மகளிர் அணி தலைவி ஓமலா மற்றும் செயலவை உறுப்பினர்களான மணிமாறன், சேகர், சின்னம்மாள் ஆகியோர் கொம்தாரில் அமைந்திருக்கும் முதல்வர் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்டனர்.
    முப்பது நிமிடங்களுக்கு நடைபெற்ற இச்சந்திப்புக் கூட்டத்தில் மாமன்றத்தின் எதிர்கால திட்டங்களையும் நிகழ்வுகளையும் முன் வைத்தனர். தற்போது இம்மாமன்றம் லெபோ சூலியா பகுதியில் அமைந்திருக்கும் கடைவீட்டின் மூன்றாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அவ்விடத்தில் நிகழ்வுகள் நடத்துவதற்கும் பொதுமக்களைச் சந்திப்பதற்கும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அம்மாமன்றத்தின் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.
  எனவே,  புதிய இடத்தில் அலுவலகம் அமைப்பதற்கு   நிலத்தை அடையாளங்கண்டுள்ளதாகவும், அதனை செயல்படுத்த மாநில அரசாங்கத்தின் உதவியை நாடுவதாக அதன் தலைவர் முதல்வரிடம் குறிப்பிட்டார். இதன்வழி மாமன்றம் பல சமூகநலத்திட்டங்கள் நடத்துவதற்கு இலகுவாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.
   அதுமட்டுமின்றி  தகுதியுடைய தனித்து வாழும் தாய்மார்களுக்கு அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த மாமன்றம் சமயம் போற்றும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பினாங்கில் அமைந்திருக்கும் 28 தமிழ்ப்பள்ளிகளிலும் சமய வகுப்புகள்  நடத்துகின்றன.
இந்த வகுப்புகள் இடம்பெற நிதியுதவி வழங்கி வரும்  ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் செயல் பாராட்டக்குறியதாகும்.
  மேலும், அடுத்த வருடம் “உலக யோகா தினத்தை ” மாநில நிகழ்வாக பாடாங் கோத்தா லாமாவில் நடத்தமாறு கேட்டுக்கொண்டார்.