15வது பொதுத் தேர்தல் இன்னும் சிறப்பாக செயல்பட இது பொன்னான வாய்ப்பு – சாவ்

Admin

பத்து காவான் – 15வது பொதுத் தேர்தல் நம்பிக்கை கூட்டணி தனது 22 மாத கால நிர்வாகத்தில் செய்ய முடியாததைச் சாதிப்பதற்கான பொன்னான வாய்ப்பாக அமைகிறது.

பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளரான மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியில் தனது மக்களை சந்திக்கும் முதல் நாள் நடைபயணத்தில் (walkabout) கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்.

“எங்களுக்கு (நம்பிக்கை கூட்டணி) ஆட்சி அமைக்க அதிகாரம் வழங்கினால் நிரூபிக்க இன்னும் நிறைய இருக்கிறது.

“நாங்கள் பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெறுகிறோம், இது நாங்கள் இன்னும் கடினமாக உழைக்க ஊக்கமளிக்கிறது,” என்று இன்று மாலை பாக்காப் இண்டா சந்தையில் புத்தாண்டு நாள்காட்டியை பொது மக்களை சந்தித்து வழங்கிய பிறகு சாவ் இதனைத் தெரிவித்தார்.

ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் ஹெங் மொய் லாய் மற்றும் நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்கள் இணைந்து சென்ற போது மாநில முதல்வர் சாவ் கொன் இயோவ் அவர்களுக்கு, சந்தைக்கு வருகையளித்த பொது மக்கள் அன்புடன் வரவேற்றனர்.

முன்னதாக, கம்போங் வால்டோர், புக்கிட் தம்பூனில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களை சாவ் சந்தித்தார். அத்துடன் 2023 ஆம் ஆண்டிற்கான நாள்காட்டிகளையும் அவர்களுக்கு வழங்கினார்.

இந்நடைபயணத்தின் போது சாவ் தனது நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள மற்றொரு பகுதியான தாமான் ஸ்ரீ அமானுக்கும் வருகையளித்தார்.

அதுமட்டுமின்றி, இன்று சுங்கை பாக்காபில் உள்ள குவான் யின் ஹூட் சோர் சங்கத்திற்கும் வருகை மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி, புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக் மற்றும் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் ஆகியோரும் உடனிருந்தனர்.

அவரது நடைப்பயணத்திற்கு முன்பு, சாவ் பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதிக்கான அவரது வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொண்டார். மேலும், செபராங் பிறை, தாமான் சாய் லெங் உள்ள ஜாலான் செயின் ஃபெரியில் நம்பிக்கை கூட்டணி சேவை மையத்தைத் தொடங்கி வைத்தார்.