பினாங்கின் எதிர்கால அடையாளமாக பெருநிலம் திகழ்கிறது – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலம் சுற்றுலாத்துறை மட்டுமின்றி பொருளாதாரத் துறையிலும் பீடுநடைப்போடுகிறது. அவ்வகையில், கடந்த ஆண்டு (2018) உற்பத்தி துறையில் ரிம5.8பில்லியன் முதலீடுச் செய்யப்பட்டு மின்னியல், இயந்திரம், பெட்ரோலியம், விண்வெளி போன்ற புதிய துறையில் முதலீடு பெற்றுள்ளது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் ‘TV3’ தொலைக்காட்சி அலைவரிசையில் ‘soal rakyat’(மக்களின் கேள்வி) எனும் நிகழ்வில் கலந்து கொண்டு பினாங்கு மாநில இலக்கு, கொள்கை, பொருளாதாரம் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தனது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன் வைத்தார்.

பினாங்கு மாநிலம் தீவுப்பகுதியில் அதிக வளர்ச்சியும் பெருநிலத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பதாகக் கூறும் கருத்திற்கு மறுப்பு தெரிவித்தார் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ். கடந்த 10 ஆண்டுகளாக ‘பினாங்கின் எதிர்காலம் செபராங் பிறையில் தொடங்குகிறது’ என குறிப்பிடப்படுகிறது. இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பெருநிலத்தின் பத்து காவான் பகுதியில் 6,500 ஏக்கர் நிலப்பரப்பில் கலப்பு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக அப்பகுதியில் தொழிற்பேட்டை, உயர்க்கல்வி நிலையங்கள், இக்கியா பல்பொருள் பேரங்காடி, வீடமைப்புத் திட்டம் என பல மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, என்றார்

 

‘பினாங்கு 2030’ இலக்கு குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் திறன்மிக்க மாநிலத்தை உருவாக்கி நாட்டின் தூண்டுகோலாக திகழ்தல் ஆகும். (A Family-focused Green and Smart State that Inspires the Nation).

இந்த இலக்கு திறன்மிக்க மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, மக்கள் பங்களிப்பு, பொது வசதிகள் மேம்படுத்தல் என நான்கு கூறுகளை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படும், என மேலும் விவரித்தார்.

நில விவகாரம் & நில மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு ஆட்சிக்கு உறுப்பினருமான சாவ்,  கடல் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் மூன்று தீவுகள் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக பெறப்படும் ரிம47பில்லியன் நிதி  கொண்டு பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டம் செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் சார்ந்த தனியார் இயக்கங்களிடம் இருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்தார். ஏனெனில் இத்திட்டத்தில் மீனவர்கள் பாதிக்கப்புள்ளாகின்றனர்.ஒவ்வொரு மேம்பாட்டு த் திட்டங்கள் மேற்கொள்ளும் போது அதன் பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான செயற்திட்டம் நடைமுறை படுத்தப்படும்.

கூட்டரசு அரசாங்கத்தின் முகவர்களான சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு ( DEIA), சமூக பாதிப்பு ஆய்வு
(SIA) வழங்கி ஒப்புதலுக்கு ஏற்ப மாநில அரசு செயல்படும் , என எடுத்துரைத்தார்.

பினாங்கு மாநிலம் வட மாநிலங்களின் உந்துசக்தியாக திகழும் வேளையில் கூலிம் அனைத்துலக விமான நிலையம் அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைத்தார்.

மேலும், கூட்டரசு அரசு பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

செய்தி: ரேவதி கோவிந்தராஜு
படம்: லாவ் சூன் திங்