அனைத்துலக கழிவறை தினக் கொண்டாட்டம்

அனைத்துலக கழிவறை தினக் கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.
அனைத்துலக கழிவறை தினக் கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.

பினாங்கு மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த நவம்பர் 19-ஆம் திகதி மாநகர் வளாகத்தில் அனைத்துலக கழிவறை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பினாங்கு மாநிலத்தை தூய்மை, பசுமை, ஆரோக்கியம், பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக உருமாற்றும் முயற்சியில் இத்திட்டமும் அடங்கும் என தமதுரையில் கூறினார் மாநில முதல்வர். எனவே, பொதுமக்களிடையே கழிவறையின் முக்கியத்துவத்தையும் அதனை பாதுகாக்கும் விழிப்புணர்வையும் மேலோங்க இத்திட்டம் ஊந்துகோளாக அமையும் என சூளுரைத்தார்.

அனைத்துலக கொண்டாட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் பொது இடங்களில் கழிவறை தூய்மை போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி உணவகம், தங்கும்விடுதி, மருத்துவமனை,
எரிவாயு நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பேரங்காடிகள் மற்றும் பொது கழிவறைகள் என எட்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. பினாங்கு மாநகர் மன்ற அதிகாரிகள் பெருநிலம் மற்றும் தீவுப்பகுதி என அனைத்து இடங்களுக்கும் நேரடியாகச் சென்று கழிவறைகளை மதீப்பீடு செய்து வெற்றியாளர்களைத் தேர்வுச் செய்தனர். ஒவ்வொரு பிரிவுகளில் ஐந்து வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பணமும் சான்றிதழும் மாநில முதல்வர் எடுத்து வழங்கினார். இத்திட்டத்தில் அடுத்தாண்டு வழிப்பாட்டுத் தளங்களையும் இணைக்க எண்ணம் கொண்டுள்ளதாக கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.

எட்டு பிரிவுகளிலும் முதல் நிலையில் வென்ற வெற்றியாளர்கள்
எட்டு பிரிவுகளிலும் முதல் நிலையில் வென்ற வெற்றியாளர்கள்

இதனிடையே, பொதுமக்களின் பங்களிப்பு, ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு இத்திட்டத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது. பினாங்கு மாநிலத்தை அனைத்துலக ரீதியில் வளர்ச்சியடைந்த அறிவார்ந்த மாநிலமாக உருமாற்றும் இலக்கில் இக்கழிவறை தினக் கொண்டாட்டமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.