ஜார்ச்டவுன் – பினாங்கு முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் மனித மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிலையான நீண்டகால சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட அணுகுமுறையை கையாண்டு வருகிறது.
15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாம் தவணையில் முதல் கூட்டத்தில், கொம்தார் மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADUN), தே லாய் ஹெங்கின் வாய்மொழி கேள்விக்கு இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ இவ்வாறு பதிலளித்தார்.
” Intel, AMD, Lam Research மற்றும் Bosch போன்ற பெறுநிறுவனங்களின் தொடர்ச்சியான முதலீடுகள் வேலை வாய்ப்புகளுக்குப் பங்களிப்பது மட்டுமல்லாமல், தொழில்நுட்ப பரிமாற்ற செயல்முறையையும் உள்ளூர் திறனையும் மேம்படுத்துவதையும் துரிதப்படுத்துகிறது.”
“உதாரணமாக, அண்மையில் Intel நிறுவனம் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் உற்பத்தி & ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) வசதிகளை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ளது.
“கூடுதலாக, தேசிய குறைக்கடத்தி கொள்கையின் இலக்குகளுக்கு ஏற்ப, 2030 ஆம் ஆண்டுக்குள் 60,000 பொறியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை இலக்காகக் கொண்ட பினாங்கு STEM திறன் வியூகத் திட்டத்தையும் இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.
இதற்கிடையில், பினாங்கு திறன் மேம்பாட்டு மையம் (PSDC), பினாங்கு STEM, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் உள்ளூர் பொதுப் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களும் தொழில்துறை தேவைகளுக்கும் கல்வி வழங்குநர்களுக்கும் இடையே இணைப்புடன் செயல்படுகின்றன என்றும் ஜக்தீப் கூறினார்.
“மேலும், பட்டதாரிகளுக்குப் பொருத்தமான தொழில்நுட்பம் மற்றும் மென் திறன்களுடன் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக, “பயிற்சி மற்றும் இடமளிப்பு”, கூட்டுத் தொழில் சான்றிதழ் மற்றும் தொழில்துறையுடன் இணைந்த பாடத்திட்ட மேம்பாடு போன்ற திட்டங்கள் கல்வி முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.”
“STEM பயிற்சியாளர்-பள்ளித் திட்டத்தின் மூலம், 37,000 மாணவர்களை உள்ளடக்கிய 4,160க்கும் மேற்பட்ட பட்டறைகள், புத்தாக்கப் போட்டிகள் மற்றும் தொழில்துறை பொறியாளர்களால் ஆதரிக்கப்படும் ஆரம்பகால பொறியியல் நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.
“மேலும், இதன் விளைவாக, இன்றுவரை, பினாங்கில் உற்பத்தித் துறையில் 41 சதவீத பணியாளர்கள் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவ பிரிவில் பணியாற்றுகின்றனர். இது தேசிய ரீதியின் சராசரியான 29 சதவீதத்தை விட அதிகமாகும்,” என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜக்தீப் இவ்வாறு விளக்கமளித்தார்.