மாணவர்களின் எதிர்கால தேர்வுக்கு கல்வி கண்காட்சி சிறந்த வழிகாட்டி – பேராசிரியர்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு மற்றும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற கல்வி கண்காட்சி 2019 கடந்த மார்ச் மாதம் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் காலை மணி 11.00 முதல் மாலை மணி 6.00 வரை மைடின், புக்கிட் மெர்தாஜாம் பேரங்காடி தலத்தில் நடைபெற்றது.

“இக்கல்வி கண்காட்சி பிரத்தியேகமாக மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) மற்றும் மலேசிய உயர்நிலை பள்ளி சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்) முடிவுகளைப் பெற்றிருந்த மாணவர்கள் தங்களின் மேற்கல்வியைத் தொடர சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது,” என பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி வரவேற்புரையில் இவ்வாறு தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்வி கண்காட்சியில் இவ்வாண்டு 8 தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையங்கள் (TVET), 30 அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி என சுமார் 38 கூடங்கள் அத்தலத்தில் அமைக்கப்பட்டன. மேலும் தொழிற்புரட்சி 4.0 எதிர்கொள்ள மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையங்களை தங்கள் தேர்வாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டில் தொழிற்சாலை நிறுவும் போது குறிப்பாக பொறியியல் துறையில் நிபிணத்துவம் மிக்க தொழிலாளர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்குகின்றனர்.
எனவே, மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையங்களில் கல்வி கற்கும் போது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று வேலை வாய்ப்பு பெறுவதற்கு பிரகாசமாக இருக்கிறது.

தற்போது அறிவியல் துறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. மாநிலப் பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதன மேம்பாடு, தொழில்நுட்பம் & புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினர் இராமசாமி ‘ஸ்தெம்’ எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்(STEM) துறையில் மாநில அரசு தனியார் துறையுடன் இணைந்து பல திட்டங்கள் செயல்படுத்துகிறது. . இதன் மூலம் மாணவர்களுக்கு ஸ்தெம் கல்வியில் அதிக நாட்டம் கொள்வதோடு நிபுணத்துவம் மிக்க மனித மூலதனத்தை உருவாக்க இயலும்.

  • “சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். எனினும், சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்றும் தொழிற்சார்ந்த கல்விகளை தேர்ந்தெடுத்து மேற்கல்வியை தொடருமாறு கேட்டுக் கொண்டார். பினாங்கு மாநில அரசு தொழிற்சார்ந்த மையத்தில் கல்வி பயில்வதையும் ஊக்குவிக்கிறது.