தொழில் திறன் பயிற்சி தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப நிபுணத்துவமிக்க தொழிலாளர்களை உருவாக்க வழிக்காட்டி – குமரேசன்

Admin

தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழிலியல் பயிற்சி வழங்கப்படுவதன் மூலம் தரமான மூலதனத்தை உருவாக்க முடிகிறது. மாநில அரசு ரிம2.01கோடி நிதி ஒதுக்கீடு பினாங்கு திறன் மேம்பாட்டு மையத்திற்கு உபகாரச்சம்பளமாக வழங்கப்படுவதன் மூலம் பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கும் தொழில் திறன் பயிற்சி வழங்க வழிக்காட்டியாகத் திகழும் என  குமரேசன் பினாங்கு மாநில 14-ஆவது சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தனது தொகுப்புரையில் இவ்வாறு தெரிவித்தார்

பினாங்கு மாநில சிறுதொழில் கடனுதவித் திட்டம் மூலம் கூடுதலான இந்திய மற்றும் சீன இனத்தை சார்ந்த சிறுதொழில் வியாபாரிகளுக்கும் கடனுதவி அங்கீகரிக்கப்பட்ட
வேண்டும் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இக்கடனுதவிப் பற்றிய அறியாமையும் விழிப்புணர்வும் இவ்விரண்டு இனத்தவரிடையே குறைவாகவே இருக்கும் பட்சத்தில் இதனை அதிகமாக விளம்பரப்படுத்தவதோடு பட்டறைகளும் நடத்தப்பட வேண்டும். மேலும், பத்து உபான் சட்டமன்ற சேவை மையம் இக்கடனுதவித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட உதவிகள் வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில அரசு தேசிய உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது மாநிலமாக திகழ்கிறது. மலேசியாவில் அதிக வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட மாநிலமும் பினாங்கு ஆகும், இது மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 35 விழுக்காடு கொண்டுள்ளது.

மாநில அரசின்  இலவச பேருந்து திட்டத்தில் பினாங்கு வாழ் பொதுமக்களுக்கு பிரத்தியேகமாக பயண அட்டை வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் உள்நாட்டினர் அதிகம் பயன்பெறுவர் என நம்பிக்கை தெரிவித்தார் . தொடர்ந்து பத்து உபான் சட்டமன்ற தொகுதியின் முத்தியாரா உணவு வங்கி திட்டத்தில் பி40 சார்ந்த 138 வசதிக் குறைந்த குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். இதனை தொடர்ந்து விரிவுப்படுத்த வேண்டும் என்றார்.

மாநில அரசு 2020 வரவுசெலவு திட்டத்தில் விளையாட்டுத் துறைக்கு ரிம 10.05 கோடி நிதி ஒதுக்கியுள்ளதை வரவேற்றார். அதிகமான இளைஞர்கள் தற்போது விளையாட்டுத் துறையில் நாட்டம் செலுத்துவதோடு இதனை முன்னெடுத்து செல்கின்றனர். அனைத்துலக ரீதியில் விளையாட்டுத் துறையில் பெயர் பதித்த ஸ்குவாஷ் வீரர் நிக்லேஸ்வர் மோகனசுந்தரம் போன்ற விளையாட்டாளர்களுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன்மூலம், இன்னும் அதிக சாதனைகள் படைக்க மையக்கல்லாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, சுங்கை நிபோங் பேருந்து நிறுத்துமிடத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தை வரவேற்றார். உள்ளூர் மற்றும் பிற மாநிலங்களுக்குப் பயணிக்கும் பயணிகளின் பிரதான இடமான பினாங்கு சென்ரல் நிலையம் போல் புதுப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.

தொடர்ந்து, பெஸ்தா தளம் தனியார் மற்றும் பொது கூட்டமைப்பு கொள்கை அடிப்படையில் அங்கு இரவுச் சந்தை, ‘அப்டவுன்’ உருவாக்கப்பட வேண்டும் என மாநில அரசிற்கு ஆலோசனை வழங்கினார். இது உள்நாட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்ய வாய்ப்புகள் அதிகரிக்க இயலும். மேலும், இதன்மூலம்  பினாங்கு மாநில சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதோடு உள்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேன்படுத்த வழிவகுக்கும் என
சட்டமன்ற உறுப்பினர் குமரேசன்.
வலியுறுத்தினார் .

மாநில அரசு ‘வாக்களிப்பு 18’ எனும் பிரச்சாரத்தை விளம்பரப்படுத்த முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இளைஞர்களிடையே  ஜனநாயகச் செயல்முறை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவது மட்டுமின்றி அவர்களை சட்டமன்ற கூட்டத்தொடருக்கு அழைத்துவர வேண்டும். எனவே, மாநில அரசு 21 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இது தொடர்பாக அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.